உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டம் குர்ஜா பகுதியைச் சேர்ந்தவர் குட்டன் சௌத்ரி (Guddan Choudhary). இவர் உத்திரப் பிரதேச காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில், குர்ஜா நகரின், கோட்வாலி காவல் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் குட்டான் சௌத்ரி.
இந்த பெண் போலீஸ் தன்னுடைய காவல் துறை தொடர்பான பணிகள் முடிந்த பின், மீதி நேரங்களில் தன் ஊர் பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பத்து பைசா வாங்காமல், இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.
வகுப்பறைகள்
சரி பள்ளிக் கூடம் எங்கு இருக்கிறது. வகுப்பு எப்படி எனக் கேட்டால்... சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்கள் தான் இவர் வகுப்பறைகள் என்கிறார்கள் அந்தப் பகுதி கூலித் தொழிலாளிகள். இதைக் குறித்து குட்டன் சொல்லும் போது "நான் குர்ஜா பகுதி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணியில் சேர்வதற்கு முன்பில் இருந்து ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறேன். இப்போது இங்குள்ள குழந்தைகளுக்கு கடந்த சில மாதங்களாக கற்பிக்கிறேன். வறுமையினால் கல்வி கற்க முடியாத குழந்தைககளுக்கும், கல்வியில் ஒரு சம வளர்ச்சி தேவை என நம்பி கற்பித்து வருகிறேன்". என்கிறார்
கொஞ்சம் ஒதுக்குங்கள்
நம்முடைய போரான சுவாரஸ்யமற்ற வாழ்நாளில் அனைவரும் சில மணி நேரம் ஒதுக்கி, ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கவும், கற்பிக்கவும் வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் நம் குட்டன். குர்ஜா பகுதியில் படிக்காத ஏழை மக்கள் நம் குட்டன் சௌத்ரியை "காவக்காரம்மா, போலீஸ்காரம்மா" என்று தான் அழைக்கிறார்களாம். இந்த காவல் தெய்வம் குர்ஜாவில் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கிய பின், பண வசதியில்லாத பல குழந்தைகளுக்கு இப்போது தங்களுக்குச் சலுகைகள் கிடைப்பதாகவே உணர்கிறார்கள். காரணம் நம் குட்டன் மூலமாக அவர்களுக்கு இலவசக் கல்வி கிடைத்துள்ளதை அத்தனை பெரிய சலுகையாகக் கருதுகிறார்கள் அந்த பகுதி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள். பல நூற்றாண்டுகளாக கல்வியை ருசிக்காதவர்களுக்கு அதன் சுவை தெரியாது என யார் சொன்னது..?
ஆதார் முயற்சி
"குர்ஜா காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக என் பணி நேரம் முடிந்ததும், பொருள் வசதி இல்லாத ஏழை குழந்தைகளுக்கு சில மணி நேரம் பாடம் சொல்லிக் கொடுக்கச் செலவிடுகிறேன். தற்போது இந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்து வருகிறேன். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரையும் நச்சரித்துக் கொண்டிருக்கிறேன்" என புன் முறுவல் செய்கிறார் இந்த பெரிய மனதுக்காரி. இந்த பள்ளிச் சேர்க்கைக்கு அவசியமான ஆதார் கார்ட்டையும் குழந்தைகளுக்கு வாங்க அரசு அதிகாரிகளிடம் பேசி முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம்.
சம்பளத்தில் பெரும் பகுதி
அதோடு விட்டாரா என்றால் அது தான் இல்லை. தனக்கு வரும் சம்பளத்தில் ஒரு பெரும் பகுதியை இந்த ஏழை எளிய மக்களின் கல்வி சம்பந்தப்பட்ட செலவுகளான நோட்டு, புத்தகம் பேனா, பென்சில் போன்ற பொருட்களுக்கு செலவழித்து வருகிறார். நம் குட்டனைப் பற்றி அந்த பகுதியில் கல்வி கற்கும் ஒரு பிள்ளையின் தாய் சொல்கிறார் "எங்க புள்ளங்களுக்கு படிப்பு தர்ற அளவுக்கு வசதி இல்லிங்கய்யா. இந்த காவகாரம்மா தான் எங்களுக்கு நிறைய பண்ணிக்கிட்டிருக்கு. எங்க புள்ளைங்க பள்ளிக் கூடத்துக்கு போகணும்னு ரொம்ப போராடுது. எப்புடியும் எங்க புள்ளைங்க பள்ளிக் கூடம் போய்ரும்-ன்னு நம்புரோங்க" என மகிழ்ச்சியில் நெகிழ்கிறார் ஆஷா தேவி.
ஆச்சர்யம்
என்னது காவல் துறையில் பணி செய்யும் ஒருவர் பணி நேரம் போக டீச்சர் வேலை பார்க்கிறாரா..? அதுவும் சம்பளம், காசு பணம் எதுவும் இல்லாமலா..? என இன்று இந்தியாவே நம் குட்டன் செளத்ரியை திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் குட்டனோ "அறியாமை இருட்டை அகற்ற கல்வி எனும் சூரியன் இந்த ஏழை குழந்தைகளின் வாழ்வில் உதயமாக வேண்டும்" என்கிற வலிமையான வாக்கியத்தை உதிர்த்துவிட்டு மீண்டும் பாடம் நடத்துகிறார். அரசு அதிகாரிகளிடம் ஆதார் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த காவகாரம்மாவுக்கு ஒரு பெரிய சல்யூட்.