டெஸ்லா மற்றும் கூகிள் ஆகிய நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் உலகின் முன்னணி டெக் நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நிலையில், இப்பிரிவில் சில காலாண்டுகளுக்கு முன்பு பெரிய அளவிலான மாற்றத்தைச் செய்தது.
இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தானியங்கி கார்கள் குறித்து உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாகத் திகழும் ஹூண்டாய் மோட்டார்ஸ் உடன் கடந்த மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனமும் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் வெறும் ஒரு மாத இடைவேளையில் இந்தப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. இதனால் மிகப்பெரிய பாதிப்புகளை ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ் எதிர்கொண்டு உள்ளது.
ஆப்பிள் கூட்டணி எதிரொலி
ஆப்பிள் உடனான கூட்டணி குறித்த அறிவிப்பு எந்த அளவிற்குச் சாதகமான எதிரொலிகளை அளித்ததோ, அதே அளவிற்குக் கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்த செய்தி பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் - ஹூண்டாய் கூட்டணி அறிவிப்பு வெளியான போது கியா மோட்டார்ஸ் பங்குகள் சுமார் 61 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. இதேபோல் கியா மோட்டார்ஸ் நிறுவனங்களும் கணிசமான உயர்வை அடைந்தது.
ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ்
இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு குறித்த செய்தி ஹூண்டாய் மோட்டார்ஸ் பங்குகளை 6.2 சதவீதமும், கியா மோட்டார்ஸ் பங்குகளை 15 சதவீதமும் அளவில் சரிந்தது. இந்தச் சரிவின் காரணமாகச் சந்தை மதிப்பில் ஹூண்டாய் 3 பில்லியன் டாலரையும், கியா மோட்டார்ஸ் 5.5 பில்லியன் டாலரையும் இழந்தது.
கூட்டணி உற்பத்தியாளர்
ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காகப் பாக்ஸ்கான் உடன் கூட்டணி வைத்துள்ளது போல் தானியங்கி கார் தயாரிப்புக்காக ஹூண்டாய் உடன் கூட்டணி வைக்க ஆப்பிள் பேச்சுவார்த்தையைத் துவங்கியது.
ஆனால் ஹூண்டாய் நிறுவனம் ஒரு ஒப்பந்த தயாரிப்பாளராக இருக்க விருப்பமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார் கோ குரூப்
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார் கோ குரூப் கூறுகையில் உலகில் பல நிறுவனங்களிடம் இருந்து கூட்டணி முறையில் தானியங்கி எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான கோரிக்கை மற்றும் விருப்பங்கள் வருகிறது. ஆனால் அனைத்தும் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்றும், ஆப்பிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தானியங்கி எலக்ட்ரிக் கார்
இந்தக் கூட்டணி நிறைவேறும் பட்சத்தில் ஆப்பிள் மற்றும் ஹூண்டாய் இணைந்து தயாரித்த தானியங்கி எலக்ட்ரிக் கார் 2027ஆம் ஆண்டில் வெளியாகும் என்றும், இதற்காக ஹூண்டாய் அல்லது கியா மோட்டார்ஸ் அமெரிக்காவில் தொழிற்சாலை அமைத்துக் கார் மற்றும் பேட்டரிகளைத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் வாயிலாகவே கியா மோட்டார்ஸ் பங்குகள் 61 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது. ஆனால் தற்போது மொத்தமாகத் திட்டம் மூடப்பட்டது.