ஒரு வழியாக கொரோனா இரண்டாம் கட்ட அலை குறைந்து சற்றே நிம்மதியினை கொடுத்துள்ளது. எனினும் இந்த நிம்மதியினை கெடுக்கும் வகையில் உருமாற்றம் அடைந்து பரவி வரும் டெல்டா கொரோனாவின் தாக்கம், வல்லரசு நாடான அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இது மிக கவலையளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சமீபத்தில் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டெக் நிறுவன அலுவலகங்கள் மீண்டும், தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.
இதனால் மீண்டும் அமெரிக்க முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 1.5 லட்சத்துக்கு மேல் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் அதிரடி
குறிப்பாக அமெரிக்காவினை சேர்ந்த டெக் நிறுவனங்கள் பலவும், தங்களது ஊழியர்களை மீண்டும் வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன. பல நிறுவனங்கள் ஊழியர்களுகளை கட்டாயம் தடுப்பூசி போட்ட பிறகு அலுவலகத்திற்கு வர கூறுகின்றன. முகக் கவசம் அணிந்து வர கூறுகின்றன.
ஐபிஎம்- அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான ஐபிஎம் (IBM) தற்காலிகமாக, தனது அலுவலகத்தினை மூடுவதாக அறிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய பரபரப்பான நகரமான நியூயார்க்கில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இந்த நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
சிலருக்கு மட்டும் அனுமதி
மேலும் அமெரிக்காவின் மற்ற நகரங்களில் உள்ள தனது அலுவலகத்தினை செப்டம்பருக்குள் திறக்க ஐபிஎம் முன்னதாக திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அதனையும் கைவிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது தற்காலிகமாக மூட கூறியுள்ள நியூயார்க் அலுவலகத்தில், அவசியம் அலுவலகம் வந்தே ஆக வேண்டும் என்ற ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வழக்குகள் அதிகரிப்பு
கடந்த ஆகஸ்ட் 16 வரையிலான ஏழு நாட்களில் சராசரியாக 1820 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகி வரும் நிலையில், டெக் நிறுவனங்கள் இத்தகைய அதிரடியான முடிவுகளை எடுத்து வருவதாக ப்ளூம்பெர்க் தகவல்கள் கூறுகின்றன. இது கடந்த ஜீலை 16 அறிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த பாதிப்பு எண்ணிக்கையானது மூன்று மடங்கு அதிகம் எனலாம். அப்போது வெறும் 607 வழக்குகள் மட்டுமே சராசரியாக இருந்த நிலையில், தற்போதைய அதிகரிப்பு என்பது கவலையளிக்க கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஷோரூம் தற்காலிகமாக மூடல்
இதோ போன்று ஆப்பிள் இன்க் நிறுவனம் அதன் தென் கரோலினாவின் சார்லஸ்டனில் உள்ள, தனது கடையில் உள்ள ஊழியர்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்த பிறகு, கடையை தற்காலிகமாக மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறைகளை ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில், தற்போது தற்காலிகமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நெறிமுறைகள்
கொரோனாவின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே ஊழியர்களின் நலன் கருதி, உள்ளூர் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் சுகாதாரம். மருத்துவ நிலைமைகளை கருத்தில் கொண்டு, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதில் பல நெறிமுறைகளை ஐபிஎம் பின்பற்றி வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
முகக் கவசம் கட்டாயம்
மேலும் தற்போதைக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்படாவிட்டாலும், முகக்கவசத்தினை கட்டாயம் அணிந்து வர வேண்டும் என ஐபிஎம் தனது ஊழியர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. தற்போது தனது 10 அலுவலகங்களில் 2 அலுவலகங்களை மட்டும் திறந்துள்ள நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் அமல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கட்டாயமில்லை
வர வேண்டிய கட்டாயமில்லை
இந்த இரு அலுவலங்களிலுமே ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் வருவதாகவும், ஊழியர்களை அலுவலகம் வர கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த இரு அலுவலகங்களிலுமே குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே மீண்டும் அலுவலகம் வந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடுமையான சவால் தான்
கொரோனாவுக்கு பிறகு ஐபிஎம்மின் பெரும்பாலான ஊழியர்கள், கிட்டதட்ட 80% பேர் ஹைபிரிட் மாடல் பணியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால், அவர்கள் பல சவால்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் ஐபிஎம்மில் 175 நாடுகளில் 3,45,000 ஊழியர்களை கொண்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தொலை தூரத்தில் இருந்து வேலை செய்வது சவாலான ஒரு விஷயமே, இதனால் ஊழியர்கள் கடும் சவால்களை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.