வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் மட்டும் திரும்பவும் ஜெயித்து அதிபராக வராவிட்டால், அவ்வளவு தான் உலக பங்குச் சந்தைகள் எல்லாம் அதளபாதாளத்தில் விழுந்துவிடும். ஆகவே நீங்கள் என்னை மீண்டும் அதிபராக தேர்ந்தேடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் (Trump) தெரிவித்துள்ளார்,
அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த ஆண்டில் நிலையில்லாமல் தடுமாறிக்கொண்டு இருந்தபோது அமெரிக்காவின் மத்திய பெடரல் வங்கி நான்கு முறை வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதன் காரணமாகவே அமெரிக்க பங்குச் சந்தைகள் அனைத்தும் சுமார் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் புள்ளிகளை வரை உயர்ந்துள்ளது.
என்னைத் தவிர நீங்கள் வேறு யாரையாவது அதிபராக தேர்ந்தெடுத்தால், பங்குச் சந்தைகள் படுவீழ்ச்சியடைவதைத் தவிர வேறு வழியில்லை. அதுவரையிலும் நீங்கள் பார்த்திராத வீழ்ச்சியை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும் மிரட்டும் தொனியில் ட்ரம்ப் பேசியுள்ளார்.
நம்ம ஊரு ஸ்டைல்
நம்ம ஊரில் எல்லாம் யாராவது ஒருவர் அநியாயத்திற்கு ரவுடித்தனம் செய்து வந்தால் அவரை வலுக்கட்டாயமாக தேர்தலில் நிற்கவைத்து எப்பாடுபட்டாவது அவரை ஜெயிக்கவைத்து, பின்னர் அவரை குறைந்த பட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு அந்த ஏரியா பக்கமே அண்டவிடாமல் பார்த்துக்கொள்வோம். அதனால் அந்த ஏரியா மக்களும் நிம்மதியாக பிழைப்பை நடத்துவார்கள்.
என்னை தேர்ந்தெடுக்காவிட்டால்
நம்மூர் பாணியைத்தான் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்துகொண்டிருக்கிறார் போல. ஆனால் அவர் சொல்வது என்னவென்றால், நீங்கள் என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் தான் இதெல்லாம் நடக்கும் என்கிறார். ஏற்கனவே நீங்கள் என்னை நான்கு ஆண்டுகளாக இப்பதவியில் உட்காரவைத்து அழகு பார்த்துவிட்டீர்கள். அதேபோல் மீண்டும் என்னை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுப்பது கட்டாயம் என்பது போல் அறிக்கை விடுத்துள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் ஏழரை
டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2016ஆம் ஆண்டில் அதிபராக உட்கார்ந்த உடனே, கையோடு ஏழரை சனியையும் சேர்த்து கூப்பிட்டுகொண்டுவிட்டாரோ என்னவோ என்று நினைக்கும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவது செய்தும் தடாலடியாக உத்தரவிட்டும் அனைத்து நாட்டு மக்களுக்கும் பீதியை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். ஒருவேளை அண்டை நாடுகளுடன் சண்டை போடுவது தான் வர்த்தக உறவு என்று யாராவது சொல்லிவிட்டார்களோ என்னவோ.
என்னை விட்டால் யாருமில்லை
ட்ரம்ப் அவருடைய டைரியில் செக்லிஸ்ட் ஏதாவது வைத்திருப்பார் போல. அடிக்கடி அந்த செக் லிஸ்டை பார்த்து பார்த்து, ஓஹோ இன்றைக்கு இந்த நாடுகளுடன் எல்லாம் சண்டை போட வேண்டும். இந்த நாடுகளுடன் எல்லாம் கை குலுக்க வேண்டும். இந்த நாடுகளுக்கு எல்லாம் சலுகையை கட் பண்ண வேண்டும் என்று குறுக்கு சோதனை செய்து டிக் அடித்துகொண்டே வருவார் போலிருக்கிறது. அந்த அளவிற்கு அனைத்து நாடுகளையும் யப்பா சாமீயோவ் விட்டால் போதுமடா என்னும் அளவிற்கு பாடாய் படுத்துகிறார். இதில் இவரை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று நம்பியார் பாணியில் மிரட்டும் தொனியில் வேண்டுகோள் விடுக்கிறார்.
நம்ம கிட்டயே வாலாட்டுறாய்ங்க
முதலில் பக்கத்து நாடான மெக்ஸிகோ மற்றும் கனடா நாடுகளுடன் எல்லைத் தகறாரை சுபயோக சுபதினத்தில் ஆரம்பித்து வைத்த கையோடு, அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்போவதாக உத்தரவிட்டார். பின்பு, சீனாவையும் இந்தியாவையும் வம்பிழுக்க ஆரம்பித்தார். இவ்விரு நாடுகளுக்கும் நாம் குறைந்த அளவிலேயே அதுவும் அத்தியாவசியப் பொருட்களையே ஏற்றுமதி செய்கிறோம். அதற்கு இந்த நாடுகள் என்னடாவென்றால் அதிக இறக்குமதி வரி விதிக்கின்றன என்று குதிக்க ஆரம்பித்தார்
நாங்களும் கூடுதல் வரி விதிப்போம்
இந்தியாவும், சீனாவும் என்னடாவென்றால் நம் நாட்டுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். நாம் அவர்களுடைய பொருட்களுக்கு வரியே விதிப்பதில்லை. இதனால் நம் பட்ஜெட்டில் துண்டுவிழுகிறதே என்று ஆத்திரப்பட்டு நம்பியார் பாணியில் உள்ளங்கையில் குத்திக்கொண்டு யோசித்து, இந்தியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு நாங்களும் கூடுதல் வரி விதிப்போம் என்று உத்தரவிட்டார்.
ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
ட்ரம்ப் ஆத்திரப்பட்டு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரியை விதித்ததால், ஆத்திரப்பட்ட சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு அதிக இறக்குமதி விதித்ததோடு, மிக முக்கியமான அரிய வகை உலோகத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில்லை என்று கட்டுப்பாடு விதித்துவிட்டது. அமெரிக்காவின் மின்னணு பொருட்களின் உற்பத்திக்கு இந்த அரிய வரை உலோகங்களை நம்பியே உள்ளது.
இந்தியாவுக்கு வரிச்சலுகை ரத்து
இந்தப் பக்கம் இந்தியாவுக்கு இது நாள் வரையிலும் அளித்து வந்த வெகுமதியான முன்னுரிமை வர்த்தக சலுகை என்ற அந்தஸ்தை பறித்துவிட்டது. இதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தக சலுகை பறிபோனது. இந்தியா இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பாதாம் பருப்பு, வாதாங்கொட்டை உள்பட 29 வகையான பொருட்களுக்கான இறக்குமதி வரியை வரும் வாரத்திலிருந்து உயர்த்தப்போவதாக தடாலடியாக உத்தரவிட்டுவிட்டது.
அதிபர் தேர்தல் பிரச்சாரம்
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த 2020ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கிறது. அதற்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தனக்கு ஆதரவை திரட்டி வருகிறார். அப்போது நம்மூர் அரசியல்வாதிகளைப் போல் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகிறார். அதில் அடுத்த அதிபராக மீண்டும் தன்னையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு ட்விட்டர் பதிவிலும் இதை பதிவிட்டுள்ளார். இவரை சுமார் 6.10 கோடி பேர் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்
தற்போது நாம் அனைவருமே அண்ணன் எப்போது சாவாது, திண்ணை எப்போது காலியாகும் என்று ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், ட்ரம்ப் அடுத்த அதிரடியாக போகிற போக்கில் ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளார். அதாவது அமெரிக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் மிகவும் கஷ்டப்படுவோமாம்.
வட்டி விகித உயர்வு
ட்ரம்ப் அதிபராக வந்ததால் தான் அமெரிக்க பங்குச் சந்தை உள்பட உலக நாடுகளின் பங்குச் சந்தைகளெல்லாம் நல்லவிதமாக வர்த்தகமாகி வருகிறதாம். அதோடு கடந்த 2018ஆம் ஆண்டில் இவர் சொல்லித்தான், அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தை தொடர்ந்து நான்கு முறை உயர்த்தியதாம். அதனால் தான் அமெரிக்க பங்குச் சந்தையும் நல்ல லாபத்தை தந்தனவாம்.
பங்குச் சந்தை சரியும்
கடந்த 2016ஆம் ஆண்டில், ட்ரம்ப் அதிபராக வராமல் எதிர்கட்சியினர் அதிபராக வந்திருந்தால் அமெரிக்க பங்குச் சந்தைகள் எல்லாம் நிச்சயம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்திருக்கும். தற்போதும் அதே போல் நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டில் தன்னை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால் நிச்சயம் அமெரிக்க பங்குச் சந்தைக் குறியீடான எஸ் அண் பி 500 குறியீடு 10000 புள்ளிகள் வரை சரிவை சந்திக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சிகள் தான் டாப்
அமெரிக்க பங்குச் சந்தையின் மற்றொரு குறியீடான டோஜோன்ஸ் குறியீட்டின் வருமானம் என்பது ட்ரம்ப் பதவிக் காலத்தில் இருந்ததை விடவும் ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர்களாக இருந்த பாரக் ஒபாமா மற்றும் பிள் கிளிண்டன் காலகட்டத்தில் அதிக வருமானத்தை தந்துள்ளன. மாறாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரொனால்ட் ரீகன் முதற்கொண்டு, சீனியர் மற்றும் ஜூனியர் புஸ், தற்போதுள்ள நம்முடைய டொனால்ட் ட்ரம்ப் வரையிலான காலகட்டத்தில் சற்று மந்தமாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.