ரூர்கி, உத்தராகண்ட் : இன்றைய கால கட்டங்களில், ஒரு இளங்கலை பட்டப் படிப்பு படித்து முடித்து, ஒரு நல்ல வேலையில் சென்று சேர்வதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது. அதிலும் சம்பளப் பிரச்னைகள் ஏராளம் இருக்கும்.
ஒரு சாதாரண பட்டதாரி, படித்து முடித்து 15,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைப்பதே மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால் இங்கு சில மாணவர்கள், மாதம் 12 லட்ச ரூபாய் சம்பளம் வாங்க இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில், துறை சார் அனுபவம் நன்றாக இருப்பவர்களுக்குக் கூட ஆண்டு சம்பளம் 12 லட்சத்தைக் கடப்பதில்லை. ஆனால் இந்த மாணவர்களுக்கு படித்து முடிப்பதற்குள் மாத சம்பளமே 12 லட்சம் ரூபாயைத் தொட்டு இருக்கிறது.
அதாவது கேம்பஸ் பிளேஸ்மெண்டில் வேலை எல்லாம் கிடைத்துவிட்டது. படித்து முடித்த பின் நேரடியாக சென்று வேலைக்குச் சேர வேண்டியது தான். இப்படி லட்சக் கணக்கில் சம்பளம் என்றால் வேறு எந்த கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கும், ஐஐடி கல்லூரி தான்.
ஐஐடி ரூர்கி கல்லூரி மாணவர்கள் தான் அந்த அதிர்ஷ்டசாலிகள். இவ்வவளவு பெரிய சம்பளத்துக்கு, மூன்று மாணவர்கள் சில அமெரிக்க நிறுவனங்களிடம் பணி நியமன ஆணை வாங்கி இருக்கிறார்களாம்.
ஐஐடி கல்லூரி விதிகள் படி, யார் அந்த மாணவர்கள் மற்றும், எந்த நிறுவனம் அந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1.54 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து பணியில் சேர்த்துக் கொள்ள இருக்கிறது போன்ற விவரங்களை வெளியிடவில்லையாம்.
இப்படி ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் என்பது ஐஐடி ரூர்கி வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரிய தொகையாம். பிடெக் கம்ப்யூட்டர் சயின்ஸ், பிடெக் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பிடெக் Engineering Physics போன்ற பாடங்களில் படித்த மாணவர்கள் என்பதை மட்டும் சொல்லி இருக்கிறார்கள்.
இன்னும் ஐஐடி ரூர்கி கல்லூரியில் வரும் டிசம்பர் 15, 2019 வரை மாணவர்களுக்கான நேர்காணல்கள் வந்து கொண்டே இருக்குமாம். எனவே வேறு யாராவது கூட இந்த 1.54 கோடி ரூபாய் சம்பளத்தை விட கூடுதலாக வாங்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஐஐடி ரூர்கி மாணவர் ஒருவருக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்தது. அது தான் ஐஐடி ரூர்கியின் மாணவர்கள் பெற்ற அதிகபட்சம் சம்பளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.