இந்தியா என்கிற துணை கண்டத்தில் பல மாநிலங்கள், தங்களுக்கு என்று தனி இன, மொழி, கலாச்சாரம், பண்பாடுகளுடன் இருக்கின்றன. இந்த வேறுபாட்டால் அவ்வப் போது குட்டி குட்டி பிரச்சனைகள் வருகின்றன.
ஆனால் இந்திய எல்லைகளைத் தாண்டிப் போய்விட்டால் எல்லோரும் இந்தியர்கள் தான் என்பதில் மட்டும் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
இன்று உலகின் வல்லரசான அமெரிக்கா தொடங்கி, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள் வரை எல்லா நாடுகளிலும் நம் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம்
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனர்களின் தாக்குதலால், வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் விவகாரத்தில், நம் இந்திய மக்களுக்கு இன்னும் கோபம் தீர்ந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவில் இருக்கும் மக்கள், சீன புறக்கணிப்பு என்கிற கோஷத்தை முன் வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அரசு நடவடிக்கை
மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. சீன நிறுவனங்களுக்கு ஹைவே (நெடுஞ்சாலை) ப்ராஜெக்ட்களைக் கொடுக்க முடியாது எனச் சொன்னது தொடங்கி சீனாவில் இருந்து மின்சார உபகரணங்கள் மற்றும் கருவிகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறது இந்திய அரசு.
மரண அடி
இது எல்லாம் என்ன, சீனாவை கொஞ்சம் கதற வைக்கும் விதத்தில் 59 சீன அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு. சீனா கொஞ்சம் ஆடித் தான் போய்விட்டது. இந்த 59 சீன அப்ளிகேஷன்களில், டிக் டாக், ஹலோ, வீ சாட், யூ சி பிரவுசர், கேம் ஸ்கேனர் போன்ற பல முன்னணி அப்ளிகேஷன்களும் அடக்கம்.
அமெரிக்கா பாராட்டு
இந்தியா, சீனாவின் 59 அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்ததை, அமெரிக்கா பாராட்டி இருக்கிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையிலும் இருக்கும் ஒரு வலுவான நட்பு காரணமாகவும், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நட்பு இன்னும் வலுவடைந்து இருக்கிறது.
அமெரிக்காவில் இந்தியர்கள்
உலகம் முழுக்க பரவி இருக்கும் நம் இந்தியர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்து இருக்கின்றன. அதே நேரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், இந்தியாவின் மத்திய அரசுக்கும், உலக நாடுகளுக்கும் ஒரு கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள். அது என்ன கோரிக்கை? வாருங்கள் பார்ப்போம்.
ராணுவ வீரர்களுக்கு சல்யூட்
அமெரிக்காவின் நியூ யார்க் மற்றும் நியூ ஜெர்ஸி மாகாணங்களில் வாழும் இந்தியர்கள், இந்திய சங்கங்கள் சம்மேளனத்துடன் (Federation of Indian Associations) சேர்ந்து, அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் ஒரு குட்டி எதிர்ப்பு கூட்டத்தை (Protest) நடத்தி இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் "எங்களுக்காக உயிர் தியாகம் செய்த ஹீரோக்களுக்கு எங்கள் வணக்கங்கள்" என வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்து இருக்கிறார்கள்.
சீனாவுக்கு எதிரான கோஷம்
"சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணியுங்கள்" "பாரத் மாதா கி ஜே"
"சீன அக்ரசனை தடுத்து நிறுத்துங்கள்" என சீனாவுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் பல கோஷங்களை போட்டு இருக்கிறார்கள். சீனாவுக்கு எதிரான பதாகைகளையும் பிடித்து சீனாவுக்கு எதிரான தங்கள் உணர்வைப் பதிவு செய்து இருக்கிறார்கள்.
திபெத் தைவான் மக்களும் பங்கேற்பு
டைம்ஸ் ஸ்கொயரில் இந்தியர்கள் நடத்திய எதிர்ப்புக் கூட்டத்தில், திபெத் நாட்டைச் சேர்ந்தவர்களும், தைவான் நாட்டைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு, மிகப் பெரிய கம்யூனிஸ்ட் தேசமான சீனாவுக்கு எதிரான கோஷங்களைப் போட்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக "திபெத் இந்தியாவோடு நிற்கிறது (Tibet Stands with India)" போன்ற பதாகைகளையும் பிடித்து இருக்கிறார்கள்.
முக்கிய கோரிக்கை
"வர்த்தகம், திபெத், தைவான் ஆகிய 3 வழிகளில் சீனாவைத் தாக்கலாம். உலகம் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும். திபெத்தின் சுதந்திரத்துக்கு உதவ வேண்டும். அதே போல தைவானுக்கும் உதவ வேண்டும்" எனச் சொல்லி இருக்கிறார் அமெரிக்க இந்தியர்கள் விவகார கமிட்டி தலைவர் ஜகதீஷ். அதோடு சீனாவை Diplomatic isolation செய்ய வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். இந்த விஷயத்தை யார் முன்னெடுத்து, சீனா மீது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.