வாஷிங்டன்: நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்ததன் மூலமாக இந்தியா மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த நாடாக மாறிவிட்டது, அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் ஜப்பானின் ஒசாக நகரத்தில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறும் சமயத்தில் இருவரும் சந்தித்து பேசும் சமயத்தில் இரு தரப்புக்கும் இடையில் உள்ள வர்த்தக பிரச்சனைகள் குறித்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்லி டேவிட்சன் பைக் இறக்குமதி செய்வதற்கு இந்தியா அதிகப்படியான வரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதுகுறித்து ட்ரம்ப் நேரடியாகவே இந்தியப் பிரதமரிடம் மோடியிடம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக குறைத்தார்.
இருந்தாலும் திருப்தி அடையாத ட்ரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவிகிதமாக அதிகரித்தார். இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம்பருப்பு உள்ளிட்ட 29 பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியது.
இறக்குமதி வரியை உயர்த்துவதாக இந்தியா அறிவித்தாலும் உடனடியாக அதை நிறைவேற்றவில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் இறக்குமதி வரி உயர்வு அமலுக்கு வரும் என்று இந்தியா அறிவித்தது. இருந்தாலும் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக இறக்குமதி வரி உயர்வை அடுத்தடுத்து ஒத்தி வைத்தது.
இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த கடந்த 6ஆம் தேதி இந்தியா வந்த அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா கொடுத்துவரும் நெருக்கடிகளையும் வர்த்தகத் தடைகளையும் உடனடியாக நீக்கவேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார். இதன் காரணமாக இறக்குமதி வரி உயர்வை கடந்த 16ஆம் தேதியிலிருந்து வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இறக்குமதி வரி உயர்வை இந்தியா ஒத்தி வைத்ததற்கு முக்கியமாக, கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்த லோக்சபா தேர்தலே காரணமாகும். தற்போது தேர்தல் முடிந்து ரிசல்ட்டும் வெளியாகிவிட்டது.
அனைவரின் எதிர்பார்ப்பையும் தகர்த்தெறிந்து, தற்போது ஆளும் பாஜக கூட்டணியே அபார வெற்றி தனியாகவே 303 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக கூட்டணியில் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டொனால்ட் டிரம்ப் வாழ்த்து
Just spoke to Prime Minister @NarendraModi where I congratulated him on his big political victory. He is a great man and leader for the people of India - they are lucky to have him!
— Donald J. Trump (@realDonaldTrump) May 24, 2019
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு தன்னுடைய வாழ்த்துச் செய்தியை ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அதில், பிரதமர் மோடியின் மிகப்பெரிய அரசியல் வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, உங்களை பிரதமராக தேர்ந்தெடுத்ததன் மூலமாக இந்திய மக்கள் அனைவரும் அதிர்ஷ்டம் செய்தவர்களாக மாறிவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வரும் ஜூன் மாதம் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் ஜி-20 (G-20) மாநாட்டில் பங்கேற்கும் சமயத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேசப் போவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் இறக்குமதி வரிவிதிப்பு உள்பட அனைத்து வர்த்தகப் பிரச்சனைகளுக்கும் பேசி முடிவெடுக்க பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், அமெரிக்காவின் நண்பராக விளங்கும் நரேந்திர மோடியும் அவருடைய கூட்டாளிகளும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இது இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. வரும் நாட்களிலும் நாம் இருவரும் இணைந்து சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பாடுபடுவோம் என்றும் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்