ஒரு சட்டம், தெளிவாக இந்தியர்களுக்கு எதிரான சட்டம். இனி அமெரிக்காவில் மேல் படிப்பு (Masters Degree or higher than that) படித்தவர்களுக்கு மட்டுமே இனி அமெரிக்க வேலை, H1B visa என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ட்ரம்பு.
இந்தியர்கள்
நம் ஐடி தோழர்கள் கிட்ட தட்ட 10 லட்சம் பேருக்கு மேலே அமெரிக்காவில் இந்த H1B visa எடுத்து தான் வேலை பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த H1B visa வில் 75.6 சதவிகிதம் விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. இதை சொல்லி வருத்தப்பட்டதும் அமெரிக்க அரசு தான்.
ஒரிஜினல் சட்டம்
ஒரு நபர், ஒரு முறை H1B visa எடுத்தால், மூன்று ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் வேலை பாக்கலாம். அதற்குப் பிறகு அமெரிக்க குடியுரிமை அலுவலகமான US Citizenship and Immigration Services (USCIS), அமைப்பிடம் விசா கால நீடிப்பு கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விசா கால நீட்டிப்பு கேட்டு வருபவர்களுக்கு நேரடியாக 3 வருஷம் தான் கால நீட்டிப்பு கொடுப்பார்கள்.
H1B visa நீட்டிப்பு குளறுபடி
இந்த இடத்திலும் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியர்கள் மீது கடுமை காட்டியது. இந்தியர்கள் விசா கால நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால், கண்னை மூடிக் கொண்டு மறுத்தார்கள். இதனால் பல்வேறு இந்தியர்கள் அங்கே அகதிகளை போல வாழ்கிறார்கள். அதோடு H1B visa வில் சென்றிருப்பவர்களின் மனைவிகள் மற்றும் கணவன்மார்கள் ஹெச் 4 ரக விசாவில் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். அவர்கள் இனி அமெரிக்காவில் வேலை பார்க்க கூடாது எனவும் ட்ரம்பு அரசாங்கம், ஒரு சட்டத்தை வகுத்திருக்கிறது. அதையும் எதிர்த்து அமெரிக்காவில் போராடி வருகிறார்கள் இந்தியர்கள்.
இப்போது
அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் (Masters Degree or higher than that) மட்டுமே இந்த H1B visaவில் உள்ளே வருவது போல சட்டத்தில் சில மாற்றங்களை முன் வைத்திருக்கிறார்கள். அதை வெளியில் இருந்து பார்த்தால் பிரச்னை தெரியாது.
இதுவரை H1B visa
முதலில் H1B visaவுக்கு விண்ணப்பிப்பார்கள். அதில் அமெரிக்காவிலேயே மேற்படிப்பு படித்தவர்களுக்கு என்று ஒரு தனி கோட்டா இருக்கிறது. இந்த கோட்டாவின் கீழ் முதலில் 20,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன் பிறகு தான் பொது கோட்டாவின் கீழ் 65,000 பேருக்கு H1B visa வழங்கப்படும். ஆக முதலில் அமெரிக்காவிலேயே உயர் படிப்பு படித்தவர்களுக்கான 20,000 பேர் கோட்டா நிரப்பப்படும், அதன் பிறகு பொதுக் கோட்டாவில் 65,000 பேருக்கான இடம் நிரப்பப்படும்.
மாற்றம்
இப்போது அமெரிக்காவில் படித்தவர்களோ, சாதாரண மக்களோ, யாராக இருந்தாலும் முதலில் 65,000 பேருக்கான பொதுக் கோட்டா நிரப்பப்படும். அதன் பிறகு தான் 20,000 பேருக்கான அமெரிக்காவிலேயே உயர் படிப்பு படித்தவர்களுக்கான கோட்டா நிரப்பப்படும். இதில் தான் சிக்கலே தொடங்குகிறது.
பிரச்னை
இப்போது செய்த மாற்றத்தின் படி 65000 பேருக்கான கோட்டாவிலேயே அமெரிக்காவில் உயர் படிப்பு படித்தவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டால், 20,000 பேருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர்களுக்கான கோட்டாவில் அமெரிக்காவில் உயர் கல்வி படிக்காதவர்களுக்கு H-1B visa அனுமதி கிடைக்காது. ஆக சுற்றி வளைத்து அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் இடம் கிடைக்கும்.
விளைவு
இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர்களுக்கு மட்டுமே H1B visa கிடைக்கும் என்கிற நிலை உருவாகும். இதனால் சாதாரன பின்புலத்தில் இருந்து ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள் இனி அமெரிக்க கனவை குழி தோண்டி புதைக்க வேண்டி இருக்கும்.
குடியுரிமை அதிகாரிகள்
இதனால் அமெரிக்க மண்ணில் அதிக திறமை உடைய, அதிக சம்பளம் பெறக் கூடியர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் பெருகும் என அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதோடு வரும் ஆண்டிலேயே இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால், அமெரிக்காவில் உயர் கல்வி படித்த 5,340 பேருக்கு கூடுதலாக விசா கிடைக்கும் என சொல்லி இருக்கிறார்கள். அதாவது 5,340 சாதாரண மக்களின் வாய்ப்பு பிடுங்கப்படும்.
நிறுவனங்கள்
வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள் இனி ஆன்லைன் முறையில் H1B visaவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்களை வடிகட்டி விரைவாக விசா வழங்க உதவும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள். இதனால் விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய அளவில் நேர விரையம் குறையுமாம்.
H1B visa மாற்றம்
அதோடு இந்த வகை விசாக்களுக்கு "specialty occupations" விசா எனவும் பெயர் மாற்றம் செய்ய இருக்கிறார்கள். இந்த புதிய பெயர் மாற்றம் குறித்த பகீர் தகவல்கள், வாங்கும் சம்பள அளவைகள் எல்லாம் இனி வரும் 2019-ல் வெளியாகும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் பயந்து போய் இருக்கிறார்களாம்.
தற்போது அமெரிக்காவில்
அமெரிக்க அரசாங்க கணக்குப் படி அமெரிக்காவில் 95,651 இந்திய மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்களாம். அதுவும் உயர் கல்வி. H-1B visa வாங்கும் தகுதி உடைய உயர் கல்வி. அதோடு 75,390 இந்தியர்கள் படித்து முடித்துவிட்டு களப் பயிற்சிக் (Practical Training) காலத்தில் இருக்கிறார்களாம்.
இதப் பேசுங்க சார்
உயர் திரு மோடிஜி, எதைஎதையோ ட்ரம்புடன் பேசுகிறீர்கள். ஒரு வலது சாரியின் மனசு இன்னொரு வலது சாரிக்குத் தான தெரியும். எதையாவது செய்து இந்தியர்களை காப்பாற்றுங்கள் மோடிஜி.
எத்தனை நாட்களுக்குத் தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பார்கள். ஒரு நிரந்தர தீர்வு எட்டினால் ஒழிய... அமெரிக்காவில் இந்தியர்கள் எட்டி உதைக்கப்பட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். அதுவும் அமெரிக்க அரசாங்கத் தாலேயே.
நீ என்னத்த சொல்லு எனக்கு என் பிரதமர் பதவி தான் முக்கியம், அடுத்த முறை பிரதமர் ஆனதுக்கு அப்புறம் பாத்துக்கலாம் என இருந்தால்... அமெரிக்க வாழ் இந்தியர்களை, 221 மீட்டர் உயரத்தில் கட்டமைக்கப்பட இருப்பவர் தான் காப்பாற்ற வேண்டும்.