லண்டன், இங்கிலாந்து: நம் இந்தியாவிலேயே இன்னும் ரியல் எஸ்டேட் சரியானதாகத் தெரியவில்லை. ஒரு பக்கம், இந்திய ரியல் எஸ்டேட்டைச் சரி செய்ய, மத்திய அரசும் தன்னால் முடிந்த வரை எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் மறு பக்கம், நம் இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள், லண்டன் மாநகரத்தில் வீடுகளை வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம் என்ன என்றால்... இதுவரை வரலாறு காணாத அளவுக்கு நம் இந்தியர்கள் லண்டனில் வீடுகளை வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த தரவுகளை நைட் ஃப்ராங்க் என்கிற ரியல் எஸ்ஏட் ஆலோசனை நிறுவனம், தன்னுடைய London Super-Prime Sales Market Insight-Winter 2019 என்கிற அறிக்கையில் சொல்லி இருக்கிறது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும், லண்டனில் வீடு வாங்கிப் போடும் இந்தியர்களின் எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம்.
நம் இந்திய புள்ளிங்கோ Mayfair, Belgravia, Hyde Park, Marylebone, St John's Wood போன்ற இடங்களில் அதிக ஆர்வத்துடன் அடித்துப் பிடித்து வீடுகளை வாங்கிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.
லண்டன் மாநகரத்தில் இந்தியர்கள் ஏன் இப்படி போட்டி போட்டுக் கொண்டு வீடுகளை வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என காரணங்களைப் பட்டியல் போட்டால்... முதல் காரணம் விலை.
அட ஆமாங்க. லண்டனில் ரியல் எஸ்டேட் விலைவாசி எல்லாம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நம் புள்ளீங்கோ வீடுகளை வாங்கிக் குவித்துவிட்டார்கள்.
லண்டனில் ரியல் எஸ்டேட் விலை சுமாராக 20 சதவிகிதம் குறைந்தது, பவுண்ட் ஸ்டெர்லிங்-க்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாற்றங்கள் மற்றும் பிரெக்ஸிட் போன்ற சந்தர்ப்பங்களைப் நறுக்கென பயன்படுத்தி இருக்கிறார்கள் நம் இந்தியர்கள்.
இப்படி வெளிநாடுகளில் வாங்கிப் போடும் வீடுகளை, ஒரு முதலீடாக செய்பவர்கள் உண்டாம். இந்திய பங்குச் சந்தைகளில் அதிக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்து லாபம் பார்ப்பதை விட, லண்டன் போன்ற உலகின் மிக முக்கிய நகரங்களின் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கவும் முதலீடுச் செய்து வருகிறார்களாம்.
ஒரு நிதி ஆண்டில், ஆர்பிஐயின் Liberalized Remittance Scheme (LRS) திட்டம் வழியாக 2.5 லட்சம் அமெரிக்க டாலர் மட்டுமே வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல முடியும் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.