உலக அளவில் கொரோனா வைரஸ் கொஞ்சம் பயங்கரமான விளைவுகளையே ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இதனால் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நிறைய சவால்களை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.
சரி கொரோனா வைரஸ் பிரச்சனையின் போது, நாம் வீட்டிலேயே இருக்கிறோம் என்கிற நிம்மதியாவது நமக்கு எல்லாம் இருக்கிறது.
ஆனால், பல கனவுகளோடு, பல்வேறு வேலை சார்ந்த விசாக்களில், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலை? குறிப்பாக, விசா காலம் முடிந்து, உழைக்கச் சென்ற நாட்டிலும் பயந்து பயந்து வாழும் இந்தியர்களின் நிலை..?
இன்ஃபோசிஸ் முயற்சி
இப்படி அமெரிக்காவில் போதுமான உதவிகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களை இந்தியா அழைத்து வந்து இருக்கிறது இன்ஃபோசிஸ் கம்பெனி. இதில் விசா காலம் முடிவடைந்த பின்பும், கொரோனாவால் முறையாக விசா நீட்டிப்போ அல்லது விமானம் பிடித்து இந்தியா வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களும் அடக்கம்.
எப்படி அழைத்து வந்தார்கள்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இருந்து, தனி சிறப்பு சார்டர்ட் விமானத்தில் (Special Chartered Flight), பெங்களூரு அழைத்து வந்து இருக்கிறார்களாம். சுமாராக 200 மக்களை (ஊழியர்கள் + அவர்களின் குடும்பத்தினர்கள்) இந்த விமானம் வழியாக அமெரிக்காவில் இருந்து இந்திய அழைத்து வந்திருக்கிறது இன்ஃபோசிஸ் கம்பெனி.
நெகிழ்ச்சி தருணம்
இன்ஃபோசிஸ் கம்பெனியில் மூத்த அதிகாரிகளில் ஒருவராக இருந்த சஞ்சீவ் போடே (Sanjeev Bode) "கொரோனா எங்கள் வாழ்கையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் பாதித்தது. சில இன்ஃபோசிஸ் ஊழியர்கள், விசா காலம் முடிந்த பின்பும், அமெரிக்காவிலேயே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள். கொரோனா லாக் டவுனால், எந்த ஒரு சர்வதேச விமான சேவையும் இல்லை" என தன் Linked In பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இன்னும் இருக்கிறார்கள்
இன்ஃபோசிஸ் மட்டும் இல்லாமல், டி சி எஸ், ஹெச் சி எல், விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற கம்பெனி ஊழியர்களில் பலரும், அமெரிக்காவில் கடந்த மார்ச் 2020-ல் இருந்து சிக்கித் தவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஊழியர்களில் சிலருக்கு வேலையே கேள்விக்குறியாகி இருக்கிறது. அதற்கும் காரணம் கொரோனா வைரஸ் தான்.
கொரோனா மத்தியிலும் அலுவலகம்
பலருக்கு அதிர்ஷ்டவசமாக, ஆன்சைட்டில் இருந்து கொண்டே, வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதித்து இருக்கிறார்களாம். சில முக்கியமான ப்ராஜெக்ட்களைக் கையாள்பவர்கள் மட்டும், க்ளைண்டின் அலுவலகத்துக்கே சென்று வேலை பார்க்க வேண்டி இருக்கிறதாம். இன்னும் இந்த கொரோனா என்ன மாதிரியான எதிர் வினைகளை எல்லாம் ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.