அமெரிக்கா அரசால் தடை செய்யப்பட்ட ஹெச் 1பி விசாவினால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு பிரச்சனை என்றாலும், இது அமெரிக்கர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே தற்போது முன்னணி ஐடி நிறுவனங்கள், அமெரிக்கா ஐடி ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகின்றன.
ஆக அமெரிக்கா அரசின் இந்த அதிரடியான முடிவு அவர்களுக்கு கைகொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம்
இது குறித்து வெளியான லைவ் மிண்ட் செய்தியில், அமெரிக்கா அரசினால் கடந்த வாரத்தில் தடை செய்யப்பட்ட ஹெச் 1பி விசாவினால், நிறுவனங்கள் பல சவால்களை மேற்கொண்டு வருகின்றன. எனினும் உள்ளூர் மக்களை அதிகம் பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனம் வலுவான உள்ளுர் நடவடிக்கைகளை வலுவாக எடுத்து வருவதாக கூறியுள்ளது.
விசா சார்பினை குறைத்துள்ளோம்
கடந்த 24 மாதங்களில் நாங்கள் எங்கள் உள்ளூர் மயமாக்கல் முயற்சியை அமெரிக்காவில் செயல்படுத்தி வருகிறோம். 10,000-க்கும் மேற்பட்டோரை அமெரிக்கர்களையோ அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களையே பணியில் அமர்த்தி உள்ளோம். இதனால் விசா சார்பினை குறைத்துள்ளோம் என்றும் இன்ஃபோசிஸின் தலைமை இயக்க அதிகாரி யு.பி பிரவீன் ராவ் கூறியுள்ளார்.
அமெரிக்கர்கள் அதிகம்
இன்ஃபோசிஸ் நிறுவனம் தற்போது எங்களது நிறுவனத்தில் விசா இல்லாத அமெரிக்கா ஊழியர்களில் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்றும், கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இன்ஃபோசிஸின் 39 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடமைப்பட்டுள்ளோம்
சாப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது ஏற்றுமதியாளரான இன்ஃபோசிஸ், 2020ம் நிதியாண்டில் அதன் மூத்த நிர்வாக ஊழியர்களில் 78 சதவீதம் பேர் உள்நாட்டில் இருந்து பணியமர்த்தப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் உள்ளூர் பணியாளர்களை பணியமர்த்த நிறுவனம் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளதாகவும், இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது 2020ம் ஆண்டு வருடாந்திர நிலைத்தன்மை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய பணியமர்த்தல்
இன்ஃபோசிஸ் நிறுவனம் 2020ம் நிதியாண்டில் 6,932 உள்ளூர் பணியாளர்களை பணியமர்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 2,035 புதிய பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அதன் ஒவ்வொரு இடத்திலும் 92 சதவீதம் புதிய பணியமர்த்தல் உள்ளதாகவும், அதில் உள்ளூர் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து முதலீடு
கொரோனாவிற்கு மத்தியிலும் எங்கள் நிறுவனம் தொடர்ந்து மேம்பட, நாங்கள் சுறுசுறுப்புடனும், விரைவிலும் செயல்பட்டு வருகிறோம். மேலும் எங்களின் நிலையை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து முதலீடுகளையும் செய்து வருகிறோம் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான சலில் பரேக் கூறியுள்ளார்.
எந்த பணி நீக்கமும் இல்லை
மேலும் இத்தகைய இக்கட்டான நிலையிலும் கூட எந்தவொரு ஊழியர்களையும் வெளியே அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதோடு கிளவுட் சேவை, டிஜிட்டல், ஆட்டோமேஷன் உள்ளிட்ட புதிய பகுதிகளில் நிறுவனம் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் எந்த பணி நீக்க திட்டமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.