இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ்-இன் ஆஸ்தான நிறுவனர் நாராயாணமூர்த்தியின் மருமகன் தற்போது பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாம் அனைவரும் அறிந்தது போலவே பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால் நாடாளுமன்றத்திலும் இந்தியர்களும் பிற நாட்டவர்களும் அதிகளவிலான உரிமை கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வகையில் தற்போது இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் ஓரே மகளான அக்ஷதா-வின் கணவரும், நாராயணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் தற்போது பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சாஜித் ஜாவித்
பிரிட்டன் அரசின் Chancellor of the Exchequer என்கிற நிதியமைச்சர் பதவியில் இருந்த சாஜித் ஜாவித் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது பதிவியை ராஜினாமா செய்தார்.
இவரது ராஜினாமக்குப் பின் பல முக்கியக் காரணங்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியானதால் பிரிட்டன் அரசியல் தற்போது சலசலப்பு உடன் இருக்கிறது.
ரிஷி சுனக்
சாஜித் ஜாவித்-இன் ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இப்பதவியில் ரிஷி சுனக்-ஐ நியமித்துள்ளார். பல்வேறு தடைகளைத் தாண்டி ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டன் தனியாகப் பிரிந்துள்ள இந்தத் தருணத்தில் சாஜித் ஜாவித்-இன் ராஜினாமா இந்நாட்டில் முக்கியச் செய்தியாக விளங்குகிறது.
இதை உடனடியாகச் சமாளிக்கும் விதமாகப் போரீஸ் ஜான்சன் இப்பதவியில் மீண்டும் ஒரு இந்திய வம்சாவளி சேர்ந்த ரிஷி சுனக் -ஐ நியமித்துச் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தலைமை செயலாளர்
39 வயதாகும் ரிஷி சுனக் பிரிட்டன் நாட்டின் Hampshire என்னும் பகுதியில் பிறந்தார். 2015ஆம் ஆண்டு முதல் Yorkshire, Richmond தொகுதியில் நின்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகிறார்.
கடந்த வருடம் போரீஸ் ஜான்சன் ஆட்சி காலத்தில் தான் துணை அமைச்சர் பதவியில் இருந்து நிதியமைச்சகத்தின் தலைமை செயலாளர் பதவியைப் பெற்றார். இப்பதவியில் பணியாற்றிச் சில மாதங்களிலேயே தற்போது பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராகியுள்ளார் ரிஷி சுனக்.
போரீஸ் ஜான்சன்
ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டன் தனியாகப் பிரிந்த நிலையில் பிரிட்டம் பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது முக்கிய நிர்வாகக் குழுவில் இருக்கும் நபர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழ் இருக்கும் ஊழியர்களைப் பணி மாற்றும் அல்லது பணிநீக்கம் செய்யும் பணியில் தீவிரமாக இருந்தார்.
அதிரடி மாற்றங்கள்
இப்போது சாஜித் ஜாவித்-யிடம் போரீஸ் ஜான்சன் இதே பதவியில் இருக்க வேண்டும் என்றால் உன்னுடைய 5 சிறப்பு ஆலோசகர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சாஜித் ஜாவித் பதவி விலகினார்.
இதன் பின்பு போரீஸ் ஜான்சன் தான் முன்பு திட்டமிட்ட படியே நிதியமைச்சகத்தின் 5 சிறப்பு ஆலோசகர்களையும் பணிநீக்கம் செய்தார். சில நாட்களுக்கு முன்பு வர்த்தகச் செயலாளர் Andrea Leadsom-வின் குழு மற்றும் சில மூத்த அமைச்சர்களையும் போரீஸ் ஜான்சன் பணிநீக்கம் செய்தார், இதன் தொடர்ச்சியாகவே சாஜித் ஜாவித் குழுவும் பணிநீக்கம் செய்யப்பட்டது.