ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஆயுத போர் முடிந்து பொருளாதார போர் தொடங்கியுள்ளது. ஆயுதங்களால் ஈரானை கட்டுப்படுத்துவதும் அச்சுறுத்துவதும் கடினம் என்பதை புரிந்து கொண்ட அமெரிக்கா தற்போது ஈரானுக்கு பொருளாதார நெருக்கடியை தர தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை பொருளாதார ரீதியாக ஒடுக்கும் நோக்கில் புதிய மற்றும் கடுமையான தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பொருளாதார பயங்கரவாதம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என ஈரான் கடுமையாக சாடியுள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு செல்லும் அனைத்து நிதிகளையும் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதே போல ஈரான் நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் என்பன போன்ற நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். மேலும் ஈரானுக்கு எந்தவிதமான உதவியையோ அல்லது ஆதரவையோ வழங்கும் எந்தவொரு நாடும் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஈரானை தனிமைப்படுத்தவும், அதன் பொருளாதாரத்தை முடக்கவும் இதுவரை இல்லாத அளவு அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. பண வரவு நின்றுவிட்டால் ஈரான் தானாகவே தாக்குதலை கைவிட்டு அமெரிக்காவின் பேச்சை கேட்கும் என்பது டிரம்பின் எதிர்பார்ப்பு. ஆனால் ஈரானோ இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகள் ஒவ்வொரு ஈரானிய குடிமகனின் அடிப்படை மனித உரிமைகளையும் குறிவைக்கின்றன. இது பொருளாதார பயங்கரவாதம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த தடைகள் ஈரானின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்கும் ஈரானின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என தெரிவித்துள்ளது. இத்தகைய கொடூரமான குற்றங்களை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஈரான் கூறியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இந்த தடைகளை அமெரிக்காவின் தோல்வியடைந்த கொள்கை என குறிப்பிட்டுள்ளார். இது ஈரானியர்களிடையே மேலும் விரோதத்தையே உருவாக்கும் என்றும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அந்நாட்டு உள்நாட்டு பொருளாதார சிக்கல்களிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்த பொருளாதார பயங்கரவாதம் உலக பொருளாதாரத்திற்கும், மற்ற நாடுகளின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அரசின் நிதி துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது இரண்டாம் கட்ட தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகள், எங்களுடன் இருக்கிறீர்களா அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகள், அந்நாட்டின் பணவீக்கத்தை அதிகரிப்பதுடன், கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தை மேலும் கடினமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டையை தீவிரப்படுத்த வழிவகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications

