ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 2 மாதத்திற்கும் மேலாக முடிவுக்கு வராமல் அப்படியே நீடிக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் திடீரென ராணுவ தாக்குதலை நடத்தின. ஈரானிடம் உலகிற்கே ஆபத்தை விளைவிக்க கூடிய அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிர ராணுவ நடவடிக்கை மேற்கொண்டன. பதிலுக்கு ஈரானும் போர் தொடுத்தது.
இந்த போரில் அயத்துல்லா அலி கமேனி உட்பட ஈரான் நாட்டு பெருந்தலைவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் மூன்று வார காலமாக ஈரானில் போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. இருந்தாலும் போர் முடிவுக்கு வரவில்லை. முதல்கட்டமாக பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக ஈரான் தரப்பும் அமெரிக்கா தரப்பும் தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வராமல் பிடிவாதம் பிடிக்கின்றன. இதனால் இரு தரப்புக்கும் இரண்டாம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை கூட நடக்காமலேயே இருக்கிறது.

ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய கடல் வழி போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறி கூறுகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு 2 மாதமாக கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை தடைபட்டு பல்வேறு நாடுகளிலும் எல்பிஜி மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது.
இந்த சூழலில் தான் ஈரான் , அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை எல்லாம் ஒரு கூட்டணியில் திரட்ட முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஈரான் அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி பெய்ஜிங் பயணம் மேற்கொண்டு சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ அவர்களை சந்தித்து பேசினார். ஈரான் போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக ஈரான் நாட்டு அமைச்சர் ஒருவர் சீனா சென்று அந்நாட்டு அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதன் முறையாகும்.

இந்த போர் தொடர்பாகவும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தீர்க்கமான ஒரு ஒப்பந்தம் வரும் வரை போர் நிற்காது என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் தான் ரஷ்யாவின் வெளியறவுத் அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சீனாவிற்கு வருகை தந்திருந்தார். இந்த மாதம் ஈரான் அமைச்சர் சீனா சென்றுள்ளார். டிரம்பின் வருகைக்கு சில வாரங்களுக்கு முன்பு இவை நடப்பது தான் முக்கியத்துவம் பெறுகிறது.
டிரம்ப் வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது பயணத்திற்கு முன்பு சீனா இந்த சந்திப்புகளை நடத்துகிறது. இந்த பயணத்தின் போது ஈரான் விவகாரம் குறித்து பேசப்படும் என சொல்லப்படுகிறது. ஒரு வேளை சீனா அமெரிக்கா - ஈரான் தரப்புக்கு மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வ்ருவதில் முக்கிய பங்காற்ற இந்த செயல்களில் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அப்படி நடந்தால் உலக அரசியலில் சீனாவின் கை ஓங்கும், பிராந்திய ரீதியாகவும் சீனாவின் பலம் வலுவாகும்.
அதே வேளையில் ஈரான் போரில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா, ரஷ்யா ஆகியவை ஈரானுக்கு மறைமுக உதவிகளை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்கா எதிர்ப்பு நாடுகளில் ஓரணியில் திரட்ட சீனா முயல்கிறதா என்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது.தற்போதைக்கு ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்து பெட்ரோல், டீசல் , கேஸ் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ஆசிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை சீனா செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications

