அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போரை நிறுத்தவும், ஹார்முஸ் முழுமையாக அனைத்து கப்பல்களுக்கும் திறக்கப்படவும் ஓமன் நாட்டின் வாயிலாக அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தான், கத்தார் நாடுகளின் துணையுடன் நடந்த மத்தியஸ்தத்தை விடவும் சிறப்பாக முன்னேறி வருவதாக அமெரிக்க தெரிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஈரான் முக்கியமான டிமாண்ட்-ஐ முன்வைத்துள்ளது. போர் வெடித்த நாளில் இருந்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் போதெல்லாம் ஈரான் வைக்கும் முக்கியமான கோரிக்கை ஹார்முஸ் நீரிணையின் முழு கன்ட்ரோல்.

இதை தான் முன்வைத்துள்ளது ஈரான், மேலும் ஹார்முஸ் திறக்கப்பட வேண்டும் என்றால் இவ்வழித்தடத்தில் செல்லும் அனைத்து சரக்கு கப்பல்களும், அதன் சரக்கு மதிப்பில் 7 சதவீதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் வழித்தடத்தின் போக்குவரத்து வாயிலாக மட்டும் சுமார் 385 மில்லியன் டாலர் ஒரு நாளுக்கு திரட்ட முடியும், இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 100 பில்லியன் டாலர் வரையில் திரட்ட முடியும் என்பதை போருக்கு முந்தைய போக்குவரத்து எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளது.
பொதுவாக கச்சா எண்ணெய் எல்லாம் VLCC எனப்படும் Very Large Crude Carrier எனப்படும் 2 மில்லியன் பேரல் கொள்ளவு கொண்ட கப்பலில் தான் ஏற்றுமதி செய்யப்படும். இதற்கு 7 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட்டால் ஒரு கப்பலுக்கு சுமார் 11 மில்லியன் டாலர் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டி வரும். சூயஸ் கால்வாய் போல் இதில் பெரிய செலவுகள் எதுவும் இல்லாத காரணத்தால் வசூல் செய்யும் தொகையில் சுமார் 97 சதவீதம் ஈரானுக்கு லாபமாக இருக்கும்.
இந்த 7 சதவீத கட்டணம் என்பது ஆப்பிள், கூகுள், என்விடியா போன்ற மாபெரும் டெக் நிறுவனங்கள் ஈட்டும் அளவிலான இணையான லாப அளவீடாகும். இதேபோல் சூயஸ் கால்வாயின் அதிகப்பட்ச வருவாயை ஒப்பிடும் போது இந்த 100 பில்லியன் டாலர் என்பது 15-20 மடங்கு அதிக லாபமாகும்.
ஏன் ஈரான் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த 100 பில்லியன் டாலர் என்பது 3ல் ஒரு பங்கு.
மேலும் ஓமன் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஈரான் 7 சதவீத கட்டணம் கூறியது மட்டும் அல்லாமல் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் இந்த கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் ஓமன் தரப்பில் கட்டணத்தை 3 சதவீதமாக குறைக்கவும், அமெரிக்க கப்பல்களுக்கும் கட்டண விலக்கு கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.
இதுக்குறித்து மூத்த ஈரான் அதிகாரிகள் கூறுகையில், இந்த பேச்சுவார்த்தையில் அதிகாரம் மொத்தமாக மாறியுள்ளது, இதேபோல் ஹார்முஸ் வழித்தடமும், இவ்வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களும் ஈரான் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என தெரிவித்துள்ளது. இதோடு இத்தகைய நிலையில் டிரம்ப் ஏதேனும் முட்டாள்தனமாக பதிவை செய்தால் மொத்த கதையும் மாறிவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஈரான் தனது கோரிக்கையில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கும் வேளையில், அமெரிக்கா இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மீண்டும் போர் வெடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

