உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமாக இருக்கும் ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் ஒரு பதற்றமான சம்பவம் நடந்துள்ளது. ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) வெளியிட்ட எச்சரிக்கைக்குப் பிறகு, அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் ஓமன் நாட்டின் தெற்கு வழித்தடத்தில் சென்ற ஒரு டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் தீ பற்றியெறிந்துள்ளது.
இந்த சம்பவம் ஈரான்- அமெரிக்கா மத்தியில் உருவான அமைதி நிலையை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ஏற்கனவே ஹார்முஸ் வழித்தடத்தில் செல்லும் அனைத்து கப்பல்களையும் ஈரான் அரசு அங்கீகரிக்கப்பட்ட 2 வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், அமெரிக்க அரசு தலைமையில் மாற்றுப் பாதையை ஓமன் நாட்டு அருகில் உருவாக்கப்பட்டது.

இதனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது 2வது முறை நடக்கும் தாக்குதலாகும். ஓமன் கடற்கரையை ஒட்டி புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தெற்கு கப்பல் வழித்தடம், ஈரானின் ஹார்முஸ்-ல் முழு கட்டுப்பாடு என்ற கொள்கையில் பெரிய இடைவெளியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து கடல் வர்த்தக அமைப்பு (UKMTO) வெளியிட்ட தகவலின்படி, ஓமன் நாட்டின் லிமா பகுதிக்கு கிழக்கே 8 கடல் மைல் தொலைவில் ஈரானின் தாக்குதல் நடந்தது. தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கரின் இடது பக்கத்தில் (போர்ட் சைட்) தாக்குதல் நிகழ்ந்ததால், உடனடியாக தீ பற்றியெறிந்தது. இந்த பாதை அமெரிக்கா ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட தெற்கு வழித்தடம்.
இந்த தாக்குதலுக்கு முன்பு, ஈரான் புரட்சிகர காவல்படை கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது. ஈரான் அனுமதித்த வழித்தடங்களைப் பயன்படுத்தாத கப்பல் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை எதிர்கொள்ளும் என்று தெரிவித்திருந்தனர். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, இவ்வழித்தடத்தில் சென்ற பல்வேறு வணிக கப்பல்கள் மீது ஏவுகணைகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தாக்குதலில் ஈரானின் IRGC படை குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு கப்பல் தீயில் சிக்கியுள்ளது. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றாலும், இந்த சம்பவம் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த பாதையில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்த தாக்குதல் ஈரான் - அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை முயற்சிகளை பாதிக்குமா என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications