தெக்ரான் : என்னதான் ஈரானை எச்சரித்தாலும் நான் போகிற போக்கில் தான் போவேன் என்றபடி, ஈரான் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் வளைகுடா கடல் பகுதியில் மேலும் ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பலை ஈரான் பிடித்து வைத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும், ஏதோ ஒரு அரபு நாட்டிற்கு எரிபொருளை கடத்தி சென்ற வெளிநாட்டு எண்ணெய் கப்பலை பாரசீக வளைகுடா பகுதியில், ஈரானின் புரட்சிகர காவல்படையின் கப்பற்படை மடக்கி பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.
7 லட்சம் லிட்டர் எரிபொருள் 7 மாலுமிகள்
அதிலும் அந்த எண்ணெய் கப்பலில் 7 லட்சம் லிட்டர் எரிபொருள் இருந்ததாகவும், அதோடு அதில் இருந்த ஏழு மாலுமிகள் இருந்ததாகவும், அவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை பிடிப்பதற்கான முயற்சி கடந்த புதன் கிழமை எடுக்கப்பட்டதாகவும், அந்த நாட்டின் ஃபார்ஸ் டிவி கூறியுள்ளது. மேலும் இந்தக் கப்பலில் இருந்த எரிபொருள், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அச்செய்திகள் குறிப்பிட்டுள்ளது.
எந்த நாட்டு எண்ணெய் கப்பல் என்று தெரியவில்லை
மேலும் ஈரானால் பிடிபட்ட இந்தக் கப்பலில் எந்தவொரு நாட்டுக் கொடி இருந்தது என்றோ, அந்த மாலுமிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த பிரச்சனை காரணமாக, அப்பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈரான் மீது தடைகளை, அமெரிக்கா அதிகப்படுத்தியதிலிருந்தே, இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
பொருளாதார தடைகளுக்கு பின்பே இந்த பிரச்சனைகள்
ஏற்கனவே பிரிட்டனின் எண்ணெய் கப்பலை பிடித்து வைத்திருந்த ஈரான், தற்போது மீண்டும் இன்னொரு கப்பலை பிடித்து வைத்திருப்பதால் அத்துறையில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா எப்போது அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதிலும் ஈரானிடம் யாரும் எண்ணெய் வாங்கக் கூடாது என்றும், அடுத்தடுத்த பொருளாதார தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா.
பிரிட்டன் கப்பல் என்னாச்சு?
இதனால் ஈரானின் பொருளாதாரம் மேன்மேலும் வீழ்ச்சியடைந்து வருவதால், ஈரான் இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னரே எரிபொருளை கடத்தி செல்வதாக கடந்த ஜூலை 13ஆம் தேதி பனாமாவின் எம்டி ரியா என்ற கப்பலை ஈரான் கடற்படையினர் பிடித்தனர். இதற்கு முன்னர் கடந்த மாதம் ஹார்முஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஒன்றை பிடித்தது ஈரான்.
நீடிக்கும் பதற்றம்
இந்த நிலையில், ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பல நாட்டு எண்ணெய் கப்பல்களும் பதற்றத்துடனேயே செல்கின்றன. எங்கு இதுபோல ஏதும் பிரச்சனையில் சிக்கி விடுவோமோ என்ற பதற்றத்திலேயே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஈரான், வளைகுடா பகுதிகள், ஹார்மூஸ் ஜலசந்தி பதற்றமான சூழ் நிலைகளிலேயே காணப்படுகிறது.