சீன நாட்டின் பொருளாதார மந்தநிலை ஏற்பட அடிப்படை காரணமாக அமைந்த கடுமையான கோவிட் -19 லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்துத் தவறான நிர்வாகம் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனது பதவியில் இருந்து விலகக்கூடும் என்று சீன சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
பல பிரச்சனைகளையும், மக்கள் எதிர்ப்புகளையும் கடந்து வந்த ஜி ஜின்பிங் இதையும் கடந்து அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வாரா..?
சீனா
உலக நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தொற்று மட்டும் இருக்கும் காரணத்தால், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வர்த்தகம், தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. ஆனால் சீனாவில் மட்டும் தனது 2020ல் அமல்படுத்திய கடுமையான ஜீரோ கோவிட் பாலிசியை இன்றும் பின்பற்றி வருகிறது.
நிர்வாகத் தவறு
இதனால் சீனாவின் உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி ஆகியவை சரிந்துள்ளது மட்டும் அல்லாமல் சீன உற்பத்தியை நம்பியிருக்கும் உலக நாடுகளில் விலைவாசியும் அதிகரித்துள்ளது. இதை மிகப்பெரிய நிர்வாகத் தவறாகக் கடந்த சில வாரங்களாகப் பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது ஜி ஜின்பிங் பதவி விலக உள்ளார் என்ற செய்தி சீன சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
ஜி ஜின்பிங்
சீனாவை ஆளும் கூட்டுத் தலைமைக் குழு கட்சியின் நிலைக்குழு கூட்டம் நடந்த பிறகு, ஜி ஜின்பிங் பதவி விலகுவது குறித்த வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மேலும், கனடாவைச் சேர்ந்த பதிவர் ஒருவரால் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது, அதைச் சீனா தடை செய்யவும், நீக்கவும் முயற்சி செய்து வருகிறது.
வீடியோ
இந்த வீடியோவில் சீனாவின் ஆளும் கட்சி அடுத்த மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் வெளியேற வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும்.
லீ கெகியாங்
இதன் மூலம் ஜி ஜின்பிங் பதவியை விட்டு வெளியேறினால் அடுத்தாகச் சீனாவின் பிரதமர் லீ கெகியாங் (Li Keqiang), கட்சி மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவார் எனத் தெரிவித்துள்ளார். சீனாவின் ஆட்சி மாற்றம் பொருளாதாரச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.