உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக் பெயரை மாற்ற வேண்டும் என்ற மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
இதற்கு என்ன காரணம் எனப் பார்க்கும் போது சமுக வலைத்தள செயலிகள் மூலம் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கவும், பங்குச்சந்தை மற்றும் பொதுப் பிரச்சனைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மார்க் ஜூக்கர்பெர்க்
பேஸ்புக் என்பது மார்க் ஜூக்கர்பெர்க் முதல் முதலில் உருவாக்கிய சமுக வலைத்தளத்தின் பெயர், ஆனால் இதுவே மிகப்பெரிய பிராண்டாக உருவெடுத்த நிலையில் நிறுவனத்தின் பெயரும் பேஸ்புக் ஆக வைக்கப்பட்டது. ஆனால் இன்று தற்போது பேஸ்புக் நிறுவனத்தில் பேஸ்புக் மட்டும் அல்லாமல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், அகுலஸ் எனப் பல வர்த்தகப் பிரிவுகள் தனித்தனியாக உள்ளது.
பேஸ்புக் திட்டம்
இந்தச் சூழ்நிலையில் அனைத்து பிரிவுகளைத் தனித்தனியாக வைக்கவும், அதேவேளையில் அனைத்து நிறுவனங்களையும் ஓரே குடைக்குள் கொண்டு வருவதற்காகப் புதிதாக ஒரு நிறுவன பெயரை வைத்து அதன் கீழ் அனைத்து வர்த்தகத்தையும் கொண்டு வர உள்ளதாக வெர்ஜ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இதற்குப் பேஸ்புக் இதுவரை எவ்விதமான மறுப்பும், பதிலும் அளிக்கவில்லை.
பேஸ்புக் பிரச்சனை
இதேவேளையில் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பல ரகசிய ஆவணங்கள் வெளியான நிலையில் பேஸ்புக் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதேபோல் மக்களை வேக்சின் போட்டுக்கொள்ளத் தடையாக இருக்கும் பதிவுகளைக் குறைப்பது, இளம் தலைமுறையில் டீனேஜ் பெண்கள் இன்ஸ்டாகிராம் மூலம் மன உளைச்சல் அடைவது போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
கிளை நிறுவனம்
இந்தப் பிரச்சனைகள் மொத்தமாக அனைத்து நிறுவனங்களையும் பாதிக்கிறது. இந்த நிலையில் தான் பேஸ்புக்-ஐ ஒரு கிளை நிறுவனமாக வைத்துக்கொண்டு புதிய நிறுவன பெயரில் இயங்க வேண்டும் என மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.
கூகுள்- ஆல்பபெட்
சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஆல்பபெட் என்ற ஒரு தாய் நிறுவனத்தைக் கொண்டு வந்து அதன் கீழ் அனைத்து நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் கொண்டு வந்தது. கிட்டதட்ட இதே கட்டமைப்பில் தான் தற்போது பேஸ்புக் நிறுவனமும் தனது வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய விரும்புகிறது.