பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் (state Bank of Pakistan ) துணை ஆளுநரான ஜமீல் அகமது, பாகிஸ்தான் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு இந்த பதவியில் இருப்பார்.
பாகிஸ்தான் மத்திய வங்கியில் கடந்த மே மாதம் முதல் கொண்டு முழு நேர ஆளுநர் இல்லாத நிலை இருந்து வந்தது.
ஜமீல் அகமது
இந்த நிலையில் தான் ஜமீல் அகமது முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பணவீக்க விகிதமானது மிக மோசமான நிலையில் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வருவதே இவரின் முக்கிய பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அனுபவம் என்ன?
ஆக இவர் தலைமையில் முதலில் மத்திய வங்கியின் பணவியல் கொள்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜமீல் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் மற்றும் சவுதி மத்திய வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவத்தினை கொண்டுள்ளார். வங்கித் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்தவர். வங்கித்துறையில் பல்வேறு முக்கிய நடவடிக்கை எடுத்ததன் மூலம் அனுபவம் மிக்கராவர்.
துணை ஆளுநர்
இதெல்லாவற்றையும் விட 2018ல் பாகிஸ்தானின் மத்திய வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் வங்கி மேற்பார்வை மற்றும் நிதி நிலைத்தன்மை குழுவிலும் இருந்தவர்.
இவர் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தானில் பணிபுரிந்த போது டிஜிட்டல் மயமாக்கல், தொழில் நுட்ப சேவைகளை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எதிர்ப்பார்ப்பு
இப்படி பற்பல அனுபவங்களை கொண்டிருக்கும் ஜமீல், பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், அந்த நாட்டின் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர என்ன மாதிரியான நடவடிக்கைகலை எடுக்க போகிறார். மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளை போலவே வட்டி விகிதத்தினை உயர்த்துவாரா? அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வரி குறைப்பு?
தற்போதுள்ள நிலையில் வட்டி விகிதத்தினை மேற்கொண்டு அதிகரித்தாலும், அது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். அதேசமயம் பணவீக்கமும் குறையாது. ஆக வரி குறைப்பு பற்றி அரசிடம் ஆலோசனை இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பாகிஸ்தானின் தற்போதைய நிலையில் இது சாத்தியமா என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.