ஜப்பான் அரசு கொரோனா தொற்றுக் காரணமாகப் பல்வேறு பிரச்சனைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளது.
ஒரு பக்கம் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, சில வாரத்தில் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா தொற்றால் பாதித்துள்ள பொருளாதாரம் வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தல் எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த வருடாந்திர பொருளாதாரக் கொள்கை திட்டத்தில் புதிதாக ஒரு தளர்வை நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.
ஜப்பான் அரசு
ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள வருடாந்திர பொருளாதாரக் கொள்கை திட்டத்தில், அந்நாட்டு நிறுவனங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் 5 வேலைநாள் முறையை வாரம் 4 நாட்கள் வேலை செய்யும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.
4 நாள் வேலை
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருக்கும் சில முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே வாரம் 4 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறை செய்துள்ள நிலையில், இந்தியா உட்படப் பல நாடுகள் இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்கான ஆய்வில் இறங்கியுள்ளது.
ஜப்பான் பாதிப்புகள்
இந்தச் சூழ்நிலையில் ஜப்பான் ஏற்கனவே கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில், மக்களின் நலன் கருதி இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது. இதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் நிறுவனங்களின் விருப்பம்.
கடும் உழைப்பாளிகள்
பொதுவாக ஜப்பான் நிறுவனங்கள் மற்றும் ஜப்பான் ஊழியர்கள் கடுமையாக உழைப்பவர்கள். இதனால் ஊழியர்கள் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தைக் குறைக்கும் விதமாகவும், ஊழியர்களின் வொர்க் - லைப் பேலென்ஸ் அளவீட்டை மேம்படுத்தவும் வாரம் 4 வேலை நாள் திட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது.
பெரு நிறுவனங்கள்
ஜப்பான் அரசு முதல்கட்டமாகத் தற்போது ஜப்பான் நாட்டில் இருக்கும் பெரு நிறுவனங்களை ஊழியர்களுக்கு மாற்றிக்கொள்ளக்கூடிய பணி நேரங்கள், வீட்டில் அல்லது ஊழியர்களுக்குச் சௌகரியமான இடத்தில் இருந்து வேலையும் செய்யும் முறை, இன்னும் பல மாற்றங்களைக் கொரோனாவுக்குப் பின்பும் நடைமுறையில் வைக்க வலியுறுத்தி வருகிறது.
ஜப்பானில் ஆய்வு
இப்புதிய முறை ஜப்பான் நாட்டில் இருக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை தீர்க்க முடியுமா என்றும், உலகளவில் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டமா, ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த மாற்றம் மூலம் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க முடியுமான என்பது போன்ற பல காரணிகளை வல்லுனர் குழு ஜப்பானில் ஆய்வு செய்து வருகிறது.
பாதிப்புகள் என்ன
4 நாட்களாக மாற்றினால் ஊழியர்கள் செய்யப்படும் வேலை அளவுகள் குறையும், மீதமுள்ள ஒரு நாளின் வேலையை எப்படிச் சமாளிப்பது என நிறுவனங்கள் ஆலோசனை செய்து வரும் நிலையில், ஊழியர்கள் தங்கள் சம்பளம் குறையும் என்ற கவலையில் உள்ளனர்.