ஜப்பான் நாடு கடினமான உழைப்புக்கு பெயர் போன ஒரு நாடு. ஜப்பானியர்களை பொருத்தவரை கூடுதல் நேரம் வேலை செய்வது என்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் இந்த கூடுதல் நேர வேலைகளால் ஏற்படக்கூடிய பணி அழுத்தம் மற்றும் மன அழுத்தங்களால் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வதும் பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .
ஜப்பான் பணி கலாச்சாரம் மோசமாக உள்ளது வொர்க் லைஃப் பேலன்ஸே கிடையாது என உலக அளவில் பரவலாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது . இந்த சூழலில் ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் சானே தக்காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குவதாக தெரிவித்துள்ளார். இரவு 2 மணி முதல் 4 மணி வரை மட்டுமே உறங்குகிறேன் என நாடாளுமன்றத்திலேயே கூறியுள்ளார்.

அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் , 2 மணி நேரமே தூக்கம் என கூறுவதன் மூலம் தக்காய்ச்சி தவறான முன் உதாரணமாக மாறி வருகிறார் என சொல்லப்படுகிறது. அதிக நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் அழுத்தத்தில் மதுபழக்கம் அதிகரிப்பதும் தெருக்களிலேயே ஊழியர்கள் உறங்குவதும் ஜப்பானில் அதிகம் காணப்படும் காட்சியாக உள்ளதாம்.
ஜப்பானியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உடல் நலனிலும் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது . ஜப்பான் அரசாங்கம் தங்கள் மக்களின் உழைப்பு பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கடந்து அவர்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகிறது . ஆனால் ஜப்பானின் புதிய பிரதமரான தக்காய்ச்சியோ தானே ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் உறங்குகிறேன் என கூறியிருக்கிறார்.
அவருடைய இந்த போக்கு ஜப்பான் நாட்டில் கடின உழைப்பு என்ற பெயரில் நடக்கும் இறப்புகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க செய்து விடுமோ என்ற அச்சம் பலரிடமும் எழுந்துள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளும் பல்வேறு தொழிலாளர் யூனியங்களும் ஜப்பான் நாட்டு அரசு மக்கள் இவ்வாறு அதீத நேரம் உழைத்து உடல் நலனை கெடுத்துக் கொள்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறது.
ஆனால் பிரதமரே இவ்வாறு நடந்து கொள்வது தான் தற்போது விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. இதற்கிடையே ஜப்பான் நாட்டு அரசு நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஓவர்டைம் நேரத்தில் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது . இது தொழிலாளர் யூனியன் மத்தியில் மேலும் கவலை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டு தொழில்துறை அமைச்சகம் வெளியிடும் தகவலின் படி அந்த நாட்டை சேர்ந்த ஒயிட் காலர் வேலையில் ஈடுபடக்கூடிய ஐந்தில் ஒரு ஊழியர் கூடுதல் நேரம் வேலை செய்வதால் ஏற்படக்கூடிய பக்கவாதம் , ஹார்ட் அட்டாக் மற்றும் பல்வேறு மனநல பிரச்சினைகளை சந்திக்கும் அபாயத்தில் இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications