எலக்ட்ரிக் கார்கள் தான் எதிர்காலம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் இனி உலக நாடுகளைக் காப்பாற்ற முடியும் என்பது தெளிவாகியுள்ளது.
டெஸ்லா, வோக்ஸ்வாகன்
எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வாகன் சிறந்து விளங்கும் விலையில், தரமான மற்றும் உறுதியான கார்களுக்குப் பெயர் போன ஜப்பான் நிறுவனம் இன்னும் பெரியளவில் எலக்ட்ரிக் கார் துறையில் இறங்காதது சோகமான விஷயம்.
சோனி மற்றும் ஹோண்டா
இந்த நிலையை மாற்றவும், டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு இணையான கார்களைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஜப்பான் நாட்டின் சோனி மற்றும் ஹோண்டா புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
புதிய கூட்டணி நிறுவனம்
ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனங்களான சோனி மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனம் வெள்ளியன்று ஒரு புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தக் கூட்டணி நிறுவனத்தின் மூலம் அதிநவீன மொபிலிட்டி மற்றும் மொபிலிட்டி சேவைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹைட்ரஜென் செல்
மேலும் இக்கூட்டணியின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலின் விற்பனை 2025 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நீண்ட காலமாக ஹைட்ரஜென் செல் கார்களைத் தயாரிக்க முயற்சி செய்து வந்த நிலையில் இந்த முயற்சிகள் நினைத்த அளவிற்கு மாபெரும் வெற்றியை அளிக்கவில்லை. இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.
சோனிக்கு டெக், ஹோண்டாவுக்கு உற்பத்தி
சோனி மற்றும் ஹோண்டா இணைந்து உருவாக்கும் இக்கூட்டணி நிறுவனம் எல்க்ட்ரிக் கார்கள் தயாரிப்பின் திட்டம், டிசைன், டெவலப் மற்றும் விற்பனை பணிகளைச் செய்ய உள்ளது. கார் உற்பத்தியை மொத்தமாக ஹோண்டா நிறுவனமும் மட்டுமே கவனிக்க உள்ளது, சோனி இப்புதிய எலக்ட்ரிக் காரின் டெக் சேவைகளை மட்டும் கவனிக்க உள்ளது.
போர்டு நிறுவனம்
டெஸ்லா-வுக்குப் போட்டியாகத் தற்போது போர்டு நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காகச் சுமார் 30 பில்லியன் டாலரை முதலீடு செய்வதாக அறிவித்த நிலையில் தற்போது 2026ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாகப் போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜிம் பார்லே தெரிவித்துள்ளார்.