இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனாவின் தாக்கமானது மிக வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் விரைந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் மக்களை காப்பாற்றுவதே பெரும் விஷயமாக உள்ள நிலையில், பொருளாதாரம் மீண்டும் சரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகள் நிதி பற்றாக்குறையால் தள்ளாடி வருகின்றன. மேற்கொண்டு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஆனால் உலகின் முதல் பொருளாதார நாடான அமெரிக்கா, மக்களை காப்பாற்றுவதில் மட்டும் அல்ல, பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
எப்படி சாத்தியமாகும்?
குறிப்பாக பல புதிய வரி திட்டங்களை கையில் எடுத்துள்ளது அமெரிக்கா. அதெல்லாம் சரி மக்கள் கையில் பணம் இருந்தால் தானே இந்த நெருக்கடியான காலகட்டத்தில் செலுத்த முடியும். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்பது புரிகிறது. செல்வந்தர்களின் முதலீட்டு ஆதாயங்களுக்கு இந்த அதிகரிப்பு என்றால், இது சாத்தியம் தானே.
அதிரடி திட்டங்கள்
இது வரி அதிகரிப்பு குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஜோ பைடன், பெரும் முதலீட்டாளர்களின் முதலீடுகளின் மூலம் கிடைக்கும் ஆதாயங்களுக்கு தான் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. புதியதாக பதவியேற்றுள்ள பைடன் அரசு, இந்த வாரத்தில் 1.8 டிரில்லியன் டாலர் மதிப்பான அமெரிக்காவின் தேசிய குழந்தை பராமரிப்பு திட்டம், ஊதியத்துடன் குடும்ப விடுமுறை திட்டம், இலவச சமுதாய கல்லூரி ஆகியவற்றை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணக்காரர்களுக்கு தான் வரி
இது பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பு மூலம் ஈடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. பைடன் அரசின் இந்த வரி விதிப்பு திட்டம் என்பது மிகப்பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே சற்று பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் பங்குகள் மற்றும் பிற சொத்துகளின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே இந்த வரி அதிகரிப்பு என கூறப்படுகிறது. மேலும் இது வருடத்திற்கு 1 மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு தான் பொருந்தும். இதனால் அடித்தட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
செலவை ஈடுகட்ட உதவும்
இந்த அளவுக்கு வரி செலுத்தும் பணக்கார மக்கள் என்பது குறுகிய அளவு மட்டும் உள்ளடக்கியது. எனினும் அரசின் இந்த வரி திட்டம் வரி செலுத்துவோரில் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது. ஆக அரசின் இந்த வரி திட்டமானது, நீண்டகால செலவினங்களை ஈடுகட்ட உதவும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த வரி அதிகரிப்பானது எவ்வளவு என்பது குறித்த தெளிவான அறிக்கையும் வரவில்லை.
வரி அதிகரிப்பு இருக்கலாம்
எனினும் ஊடக அறிக்கைகள் capital gains tax rate விகிதம் 20%ல் இருந்து 39.6% வரையில் அதிகரிக்கலாம் என்றும் கூறுகின்றன. எனினும் உண்மை நிலவரம் என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரே தெரிய வரும். இதுவே top capital gains tax rate விகிதம் 43.3% வரையில் உயரலாம் என்றும் கூறப்படுகிறது. இது 1920க்கு பிறகு இது மிக அதிக உயர்வாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நியாயமான பங்கினை செலுத்துங்கள்
இது சற்று அதிகமாக இருந்தாலும் இதன் மூலம் எங்கள் குழந்தைகள் மற்றும் எங்கள் குடும்பங்கள், எதிர்கால போட்டித் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ஜோ பைடன், செல்வந்தர்கள் அரசின் இந்த கொள்கைகளுக்கு நிதியளிக்க வேண்டும். தங்களது நியாயமான பங்கினை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பைடனின் திட்டத்திற்கு ஆதரவு
இது குறித்து அமெரிக்கர்களிடம் நடத்திய ஆய்வுகள், பைடனின் இந்த திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் கூறப்படுகிறது. பைடனின் இந்த மாபெரும் திட்டம் உள்கட்டமைப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவும் பயன்படும். எனினும் இந்த மாபெரும் வரி திட்டத்திற்கு குடியரசு கட்சியினரும், வணிகக் குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தனியார் முதலீடுகளை குறைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படியிருப்பினும் பைடனின் இந்த திட்டங்கள் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவிலும் இது போன்ற திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் நன்றாக இருக்கும் தான். ஆனால் முதலில் அமெரிக்கா நடைமுறைப்படுத்தட்டும்.