உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில், சில எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்து கொண்டு தான் உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், குழந்தைகளுக்காக தயாரிக்கும் பவுடரில் தீங்கிழைக்கும் பொருட்கள் உள்ளதாக, பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தான் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடாவில் அதன் பவுடர் விற்பனையை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஸ்டாக் உள்ளவரை மட்டுமே விற்பனை
மேலும் தற்போதுள்ள அனைத்து சரக்குகளும் விற்பனை செய்து முடியும் வரை தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று இந்த நிறுவனத்தின் வட அமெரிக்க நுகர்வோர் பிரிவின் தலைவர் கத்லீன் விட்மர் கூறியுள்ளார். கடந்த 1890 முதல் முதலாக குழந்தைகளுக்கான பவுடர்களை விற்பனை செய்யத் தொடங்கிய ஜான்சன் & ஜான்சன், இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினை எடுத்துள்ளது.
தொடர்ந்து பல குற்றச்சாட்டு
இந்த ஜான்சன் & ஜான்சன் பவுடர் புற்று நோய்க்கான அபாயங்களைத் மறைத்தாக பல குற்றச்சாட்டுகளை ஜே & ஜே எதிர்கொண்டுள்ளது. இதற்காக இந்த நிறுவனம் பல பில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்தியுள்ளது. இதனை நாம் இதற்கு முன்பே பல செய்திகளில் படித்திருப்போம். இதற்கிடையில் இந்த அறிவிப்பு அதாவது விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக வெளியான பின்னர் ஜான்சன் & ஜான்சன் பங்கு விலையும் சரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எந்த விதமான பவுடர்?
1980 முதலே சந்தையில் இருக்கும் ஜே & ஜே கார்ன்மாவு சார்ந்த பேபி பவுடரை அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்பனை செய்து வருகின்றது. அமெரிக்காவில் குழுந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் பவுடர் பொருட்களில் 75 சதவீதம் கார்ன்மாவினை பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்கள் என்றும். இதே 25 சதவீதம் டால்க் அடிப்படையிலான பவுடர்கள் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
விற்பனையில் படு வீழ்ச்சி
ஜான்சன் ஜான்சன் பேபி பவுடர் தற்போது விற்பனையில் குறைந்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அதன் வருவாயில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாகவும் விட்மர் கூறியுள்ளார். ஏனெனில் நுகர்வோரின் பழக்கம் மாறியுள்ளதால் கடந்த 2017முதல் கொண்டே அதன் விற்பனையில் 60 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் விட்மர் கூறியுள்ளார். இதுவும் விற்பனை நிறுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
குழப்பமான வணிகத்தில் நாங்கள் இல்லை
இதற்கு முக்கிய காரணம் உற்பத்தியின் பாதுகாப்பினை சுற்றியுள்ள தவறான தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களை குழப்பும் வணிகத்தில் நாங்கள் இல்லை என்றும் விட்மர் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதத்திலேயே இது குறித்தான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் விட்மர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.