சமீப காலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, அதுவும் குறுகிய காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு நிறுவனம் தான் கியா மோட்டார்ஸ்.
ஹூண்டாய் மோட்டார்ஸின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ், சியோலை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான கியா மோட்டார்ஸ், கடந்த 2015ம் ஆண்டிலேயே 3.3 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்காலிகமாக ஆலையை மூட திட்டம்
உலகளவில் ஜப்பான் மற்றும் வட கொரியா தவிர மற்ற நாடுகளில் தனது ஆதிக்கத்தினை செலுத்தி வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனம், சொகுசு கார்கள், வர்த்தக வாகனங்கள் பிரிவில் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் உலகெங்கிலும் கொரோனாவின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில், கியா மோட்டார்ஸ் அதன் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேவை முடக்கம்
பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதிலும் கார்களுக்கான தேவை முடங்கியுள்ளதாகவும், இது ஏற்றுமதியை பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக அதன் முக்கிய வாடிக்கையாளர்களான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தான் தற்போது கொரோனாவின் மைய நாடுகளாக திகழ்கின்றன.
உறுதியாக தெரியவில்லை
இதனால் தனது தென் கொரியாவில் உள்ள மூன்று ஆலைகளை தற்காலிகமாக மூட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது ஏப்ரல் 23 - 29 வரை மூடவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் அதன் சங்கங்கள் இன்னும் அதை ஏற்றுக் கொள்ளுமா என தெரியவில்லை. அது இன்னும் தெளிவாக முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பங்கு வீழ்ச்சி
இதனையடுத்து கியா மோட்டார்ஸ் பங்கு விலையானது இன்று காலை வர்த்தகத்தில் 3.4% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே ஹூண்டாய் மோட்டார் பங்கு விலையானது 2% வீழ்ச்சி கண்டும் வர்த்தகமாகியுள்ளது. ஏனெனில் தொடர்ந்து ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பல இடங்களில் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
அத்தியாவசியம் தவிர அனைத்தும் மூடல்
ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தென் கொரியா மற்றும் சீனா தவிர மற்ற ஆசிய நாடுகளில் உள்ள ஆலைகள் மூடியுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க பல நாடுகள் தங்களது நாட்டில் உள்ள அத்தியாவசியம் தவிர அனைத்து ஆலைகளையும் மூட பல நாடுகளின் அரசுகள் உத்தரவிட்டுள்ளன.