கச்சா எண்ணெய் விலையானது சமீபத்திய காலமாகவே சற்றே சரிவில் இருந்தாலும், பெரியளவில் இது ஏற்றமும் காணவில்லை. சரியவும் இல்லை எனலாம்.
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு கச்சா எண்ணெய் விலையில் கடும் தாக்கம் இருந்து வந்த நிலையில், மேற்கத்திய நாடுகள் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வைத்து, ரஷ்யாவை முடக்க நினைத்தன.
இன்று வரையில் பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்திருந்தாலும், ரஷ்யா இன்றும் அசராத ஒரு எண்ணெய் உற்பத்தியாளராக இருந்து வருகின்றது.
மேற்கத்திய நாடுகள் திட்டம்
நாங்கள் தடை செய்யப்போகிறோம். தடை, என பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், மாற்று வழியினை ரஷ்யா கண்டிபிடித்து அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் எப்படியேனும் ரஷ்யாவினை முடக்கியாக வேண்டும் என மேற்கத்திய நாடுகள் பலவும் கங்கணம் கட்டிக் கொண்டு அடுத்தடுத்த திட்டங்களை போட்டு வருகின்றன.
ஜி 7 நாடுகளின் திட்டம்
அப்படி திட்டமிடப்பட்ட ஒன்று தான் ஜி7 நாடுகளின் அறிவிப்பு. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்தாலும் பரவாயில்லை, அதனை ஏற்றுமதி செய்தாலும் பரவாயில்லை. ஆனால் பேரல் 60 டாலர்களாக உச்ச வரம்பு இருக்க வேன்டும் என கண்டிஷன் போட்டுள்ளன. இதனால் ரஷ்யா தங்கள் வழிக்கு வரலாம் என மேலை நாடுகள் திட்டமிடுகின்றன.
ஒபெக் நாடுகளின் முடிவு
இதற்கிடையில் ஒபெக் நாடுகள் கச்சா உற்பத்தி விலையை கட்டுக்குள் வைக்க குறைக்கலாம் என எதிர்பார்க்கபட்ட நிலையில், தற்போதைய உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளன. இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையில் பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தாது எனலாம். இந்த போக்கு நவம்பர் 2023 வரையில் தொடரலாம் என்றும், அதுவரையில் நாளொன்றுக்கு 2 மில்லியன் பேரல்கள் உற்பத்தியினை வழக்கம்போல குறைத்து வரும் என்றும் தெரிவித்துள்ளன.
ஒபெக் நாடுகளின் பச்சை கொடி
முன்னதாக நிபுணர்கள் இந்த ஒபெக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மீண்டும் குறைப்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழாமல் வழக்கம்போல் தான் என ஒபெக் நாடுகள் பச்சை கொடி காட்டிவிட்டன.
ஐரோப்பிய யூனியன் முடிவு என்ன?
இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் கடல் வழியாக செல்லும் அனைத்து இறக்குமதிகளை தடை செய்ய தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் ஜி7 நாடுகளின் எண்ணெய் வரம்பும் மேற்கொண்டு ரஷ்யாவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தீமை தான் அதிகம்
எனினும் ரஷ்யாவுக்கு உச்ச வரம்பை நிர்ணயிப்பது நன்மையை விட, அதிக தீங்கினை தான் விளைவிக்கும் என கிரெம்ளின் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையானது 120 டாலர்கள் என்ற லெவலில் இருந்து 90 டாலர்களாக குறைந்துள்ளது. இதற்கிடையில் தற்போது உலக நாடுகள் பலவும் ரெசசன் அச்சத்தில் உள்ளன. போதாக்குறைக்கு சீனாவிலும் தேவை குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக இன்னும் விலை குறைய வாய்ப்பிருக்கிறது என எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் வேண்டுகோள்
ஏற்கனவே அமெரிக்கா முன்னதாக உற்பத்தி குறைப்பு வேண்டாம் என கூறிய நிலையில், தான் உற்பத்தி குறைப்பானது கடந்த நவம்பர் மாதத்திலேயே நிறுத்தப்பட்டது. இது உலக நாடுகள் பெரும் மோசமான போக்கினை எதிர்கொள்ள நேரிடும். பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும். எரிபொருட்கள் விலை மோசமான அளவுக்கு ஏற்றம் காணலாம் என கூறியிருந்தன. ஆக உற்பத்தி குறைக்காமல் இருப்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுமென்றும் கூறியிருந்தது.
எதற்கும் கவலையில்லை
மொத்தத்தில் ஜி7 நாடுகளின் முடிவினை ஏற்கனவே ஏற்க முடியாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த ரஷ்யா, தற்போது உச்ச வரம்பால் பிரச்சனை உங்களுக்கு தான் என சூசகமான எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இது ரஷ்யா இதற்கும் கவலைபடவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது எனலாம்.