பாகிஸ்தான் பொருளாதாரம் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்து வருகின்றது. குறிப்பாக அதன் அன்னிய செலவாணி கையிருப்பானது மிக குறைந்த அளவு உள்ளது. இது இன்னும் சில வாரங்களுக்கே தாக்கு பிடிக்கும். அதன் பிறகு பாகிஸ்தானின் நிலை என்னவாகுமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
ஏற்கனவே பாகிஸ்தானில் உணவு பணவீக்கம் என்பது மிக மோசமான உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது இன்னும் மோசமாகலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது தற்போது 31% எனும் அளவுக்கு உள்ளது.\
அன்னிய செலாவணி பற்றாக்குறை
தற்போது அன்னிய செலாவணி பற்றாக்குறையும் மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது சாமானிய மக்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, எரிபொருள் கிடைப்பதை கூட சிக்கலாக்கலாம். ஏற்கனவே விலைவாசி என்பது விண்ணை தொடும் அளவுக்கு பல பொருட்கள் விலையும் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் இன்னும் எந்த மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க போகிறதோ தெரியவில்லை. ஏற்கனவே மேற்கண்ட பிரச்சனைகளால் மக்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகின்றது.
இருளில் மூழ்கியுள்ள பாகிஸ்தான்
இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக பாகிஸ்தான் தற்போது இருளில் மூழ்கியுள்ளது எனலாம். அங்கு பெரிய அளவிலான மின் தடை என்பது இருந்து வருகின்றது. பல நகரங்களில் மின்சாரம் முற்றிலும் இல்லாமல் இருளில் முடங்கியுள்ள வீடியோக்கள் வலம் வந்து கொண்டுள்ளன.
நாடாளுமன்றமே முடக்கம்
எனினும் தற்போது மின்சாரத்தினை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்படி சிக்கலானதொரு நிலைக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்றமே மூன்று நாட்களாக செயல்படவில்லை. நாடளுமன்றத்தில் உள்ள தேசிய சட்டமன்றம் முதல் செனட் செயலகம் வரையில், இன்னும் சில தினங்களுக்கு செயல்படாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்போது சரியாகும்?
இந்த பிரச்சனையானது தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், மின்சார துண்டிப்பு ஏற்பட்டதாகவும் எரிசக்தி துறையானது தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரங்களுக்குள் இந்த நிலைமை சீரடையலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்னடைவுக்கு தள்ளப்படலாம்
இதன் காரணமாக பாகிஸ்தான் மேலும் பின்னடைவுக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் முதலீடுகள் குறைந்துள்ளன. இதற்கிடையில் பெரியளவில் இறக்குமதி செய்யும் சூழலும் தற்போது பாகிஸ்தானில் இல்லை. எரிபொருள் செலவினங்களும் அதிகளவில் உள்ளன. இது மேற்கோண்டு பாகிஸ்தான் பொருளாதாரத்தினையும், பாகிஸ்தான் கரன்சியினையும் மிக மோசமாக பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 வருடங்களில் இல்லாதளவுக்கு அதிர்ச்சி
இது ஒரு புறம் எனில், மறுபுறம் ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் அதன் முக்கிய பெஞ்ச்மார்க் விகிதத்தினை 100 அடிப்படை புள்ளிகளை அதிகரித்து, 17% ஆக அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதமானது 1997 -க்கு பிறகு மிக அதிகமான விகிதமாகும். இது பாகிஸ்தானை மேலும் அதல பாதாளத்திற்குள் தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.