உலகின் மிகப்பெரிய சமுகவலைதளமான பேஸ்புக் நிறுவனம் மறைமுகமாகச் செய்து வரும் பல பணிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்சிஸ் ஹாகன், மார்க் ஜூக்கர்பெர்க் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலக வேண்டும் என அறிவித்துள்ளார்.
பேஸ்புக் சமுகத்தில் எப்படியெல்லாம் மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும், வெறுப்பையும், வன்முறையை விதைக்கிறது என்பதற்கான சான்றுகளை பிரான்சிஸ் ஹாகன் வெளியிட்டு இதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான நிர்வாகம் பேஸ்புக் மூலம் பிற நிறுவனங்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக மெட்டா என்ற புதிய ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், அகுலஸ் ஆகிய நிறுவனங்களைக் கொண்டு வந்துள்ளது.
பிரான்சிஸ் ஹாகன்
இந்நிலையில் பிரான்சிஸ் ஹாகன் பேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் இந்த ரீபிராண்டிங் மூலம் தப்பிக்கப் பார்க்கிறார், முதலில் மார்க் ஜூக்கர்பெர்க் சிஇஓ பதவியை விட்டு வெளியேற வேண்டும். இதன் மூலம் பேஸ்புக் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
சமீப காலமாகவே அமெரிக்காவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் இளம் தலைமுறையைப் பெரிய அளவில் பாதித்து வருவதாகவும், ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பேஸ்புக் அதிகமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
யார் இந்த பிரான்சிஸ் ஹாகன்
இதற்கிடையில் பேஸ்புக் நிறுவனம் மறைமுகமாகச் செய்து வரும் பல பணிகள் குறித்த ஆவணங்களை பிரான்சிஸ் ஹாகன் வெளியிட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பிரான்சிஸ் ஹாகன் பேஸ்புக் நிறுவனத்தில் 2 வருடமாக பிராடெக்ட் மேனேஜர் இந்நிறுவனத்தின் civic integrity அணியில் பணியாற்றியுள்ளார்.
பிரான்சிஸ் ஹாகன் பணி இதுதான்
37 வயதான பிரான்சிஸ் ஹாகன் பேஸ்புக் தளத்தில் தவறான தகவல்கள் பரவுகிறதா என்பதைக் கண்காணிப்பு செய்யவும், மக்களின் ஜனநாயகத்தைப் பாதிக்காமல் தளம் இயங்குவதை உறுதி செய்வதே இவரின் பணி. இதில் பல கோளாறுகள் இருப்பது கண்டுபிடித்து அதற்கான ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.