உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது நாளுக்கு நாள் உச்சம் தொட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் தடை விதித்து வருகின்றன.
இதற்கிடையில் பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகின்றன.
அந்த வகையில் 30 வருடங்களாக தனது சேவையினை ரஷ்யாவில் செய்து வந்த மேக்டொனால்டு நிறுவனம், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அங்கிருந்து வெளியேறவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உணவகங்களை மூட திட்டம்
மேலும் ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உலகின் மிக பெரிய உணவு சங்கிலி நிறுவனமான மேக்டொனால்டு, ரஷ்யாவில் 847 உணவகங்களைக் கொண்டுள்ளது. மேக் டொனால்டின் இந்த நடவடிக்கையினால் மாத மாதம் 50 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் விற்பனையாளர்களுக்கு
முதன் முதலாக ரஷ்யாவில் 1990ல் மெக்டொனால்டு உணவகம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக, உள்ளூர் விற்பனையாளர்களுக்கு உணவகங்களை விற்பனை செய்யவுள்ளதாக மேக்டொனால்டு தெரிவித்துள்ளது.
பொருளாதார தடை காரணமா?
உக்ரைனில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற செயல்பாட்டினால், மெக்டொனால்டு இந்த முடிவினை எடுத்துள்ளது. இது ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையில் இருந்து விலக மேக்டொனால்டு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு சம்பளம்
இதற்கிடையில் இந்த ஒப்பந்தம் முடிவடையும் வரையில், மெக்டொனால்டு 62,000 ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விற்பனை செய்யும் நிறுவனத்துடன் இணைந்து, எதிர்கால வேலைகள் குறித்து உறுதி செய்வதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலையிழப்பு ஏற்படலாம்
மெக்டோனால்டு மட்டும் அல்ல, பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவினை விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ளன. இதன் காரணமாக பல்வேறு ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இது மேற்கோண்டு ரஷ்யாவுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.