ஒட்டுமொத்த உலக மக்களையும் வீட்டில் உட்கார வைத்த கொரோனா தொற்றுக்கான வேக்சின் உற்பத்தி இன்னும் போதுமான அளவிற்குத் தயாரிக்க முடியாமல் இந்தியா உட்பட உலக நாடுகள் தவித்து வரும் நிலையில் அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் மெர்க் என்னும் நிறுவனம் கொரோனாவுக்கான மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்துள்ளது.
இந்த மருந்துக்கு ஒப்புதல் பெற மெர்க் நிறுவனம் இன்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம் தனது மருந்தையும், மருந்தை ஆய்வு செய்த அறிக்கையும் சமர்ப்பித்துள்ளது.
இந்த மருந்து மட்டும் ஒப்புதல் பெற்றால் அடுத்த 3 மாதத்தில் உலகமும் முழுவதும் அனைவருக்கும் கோவிட் தடுப்பு மாத்திரை கொடுக்க முடியும்.
கொரோனா வேக்சின்
கொரோனா வேக்சின் மருந்தைத் தயாரிப்பதை விடவும் மாத்திரை தயாரிப்பது மிகவும் எளிது, குறிப்பாக இந்தியாவில் மாத்திரை தயாரிப்பது என்பது பழம் தின்று கொட்டை போடும் விஷயம். இந்த வகையில் இந்தக் கோவிட் தடுப்பு மாத்திரைக்கு ஒப்புதல் கிடைத்தால் இந்தியாவில் ஒப்புதல் பெற்ற அடுத்த ஒரு மாதத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட் வேக்சின் அளிக்க முடியும் அந்த அளவிற்கு மாத்திரை தயாரிப்பது எளிது.
மெர்க் நிறுவனம்
மெர்க் நிறுவனம் தற்போது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம் ஒப்புதல் பெறுவதற்காகச் சமர்ப்பித்துள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் இதற்கான முடிவு அறிவிக்கப்படும். மேலும் உலகளவில் பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பதற்காக மாத்திரை தயாரிக்க முற்பட்டு இருந்தாலும், ஒப்புதல் அளவிற்கு முன்னேறியுள்ளது மெர்க் நிறுவனம் மட்டுமே.
உலக நாடுகள்
இதுவரை உலக நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து வேக்சினும் திரவ மருந்து வகைகள் தான், முதல் முறையாக மாத்திரை வடிவில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதால் கூடுதலான பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.
மாத்திரை
அனைத்திற்கும் மேலாக மாத்திரை தயாரிப்பு எளிது என்பதால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்ப முடியும். மேலும் வர்த்தகப் பாதிப்பு, பொருளாதாரப் பாதிப்பு, உயிரிழப்பு அனைத்தும் குறையும்.