உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எப்படி பில் கேட்ஸ் யாருக்கும் இடம் கொடுக்காமல் முதல் இடத்திலேயே இருந்தாரோ உலகிலேயே மிகப்பெரிய சந்தை மதிப்புக் கொண்ட நிறுவனம் என்ற பெயரை நீண்ட காலம் ஆப்பிள் வைத்திருந்தது.
ஆனால் இன்று இரண்டுமே மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன்பு வரையில் வைத்திருந்த முதல் இடத்தைத் தற்போது டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் வைத்திருக்கும் நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இடத்தை நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் பெற்றுள்ளது.
ஆப்பிள் நிறுவன
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை மற்றும் தயாரிப்பு சிப் தட்டுப்பாடு காரணமாகவும், சர்வதேச சந்தை சரிவின் காரணமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஆப்பிள் நிறுவன பங்குகள் கடந்த சில வாரங்களாகவே அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
மைக்ரோசாப்ட்
இதன் வாயிலாக மைக்ரோசாப்ட் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து தொடர்ந்து பங்கு வளர்ச்சியின் காரணமாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது. சத்ய நாடெல்லா நிர்வாகத்தின் கீழ் மைக்ரோசாப்ட் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
ஆப்பிள் சந்தை மதிப்பு
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 1.81 சதவீதம் சரிந்து 149.81 டாலராகச் சரிந்த நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 2.48 டிரில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.
6 பில்லியன் டாலர்
ஆப்பிள் நிறுவனம் இந்தச் செப்டம்பர் காலாண்டில் அதிகளவிலான சப்ளை செயின் பிரச்சனையை உலக நாடுகளில் எதிர்கொண்டது. இதனால் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீட்டில் 6 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் பங்குகள்
இதற்கு நேர் எதிராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தால் மைக்ரோசாப்ட் பங்குகள் விலை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 2.24 சதவீதம் அதிகரித்து 331.62 டாலர் அளவீட்டை அடைந்துள்ளது.
ஆப்பிள்-ஐ ஓரம்கட்டியது மைக்ரோசாப்ட்
இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு முதல் முறையாக 2.49 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட்டு உள்ளது. இதனால் உலகின் அதிகச் சந்தை மதிப்புக் கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை ஓரம்கட்டி மைக்ரோசாப்ட் பிடித்துள்ளது.