கராச்சி : பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார நிலையில் உள்ளதாகவும், இது மேலும் மோசமான பிரச்சனை சந்திக்கலாம் என்றும் ஆராய்ச்சி நிறுவனமான மூடிஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக சர்வதேச நாணய நிதியம் 2019 - 2020ம் ஆண்டில் பாகிஸ்தானின் வளர்ச்சி வெறும் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வளர்ச்சியடையும் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு நட்டின் பொருளாதார மந்தம் நீடிக்கும் போது, அந்த நாட்டின் சில்லறை பணவீக்கம் குறைய வேண்டும் என்று கூறுவார்கள், ஆனால் பாகிஸ்தானில் இந்த பணவீக்க விகிதமானது 9 சதவிகிதத்தை நெருங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணம் அங்கு, ஒரு லிட்டர் பாலின் விலையானது 140 ரூபாய் என்று அண்மையில் செய்திகள் வெளியானது. இது ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் விலையை விட அதிகமாகும்.
இது குறித்து மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா- சீனா பிரச்சனையால் உலக நாடுகள் தீவிர பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இந்த நிலையில், இஸ்லாமாபாத் வெளிநாட்டு கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனாளர்களின் மெல்லிய இருப்பு காரணமாக, போதிய நிதி கிடைக்காமல் தள்ளாடும் நாடுகளின் பட்டியலில், பாகிஸ்தானையும் நிலை நிறுத்தியுள்ளது மூடிஸ்.
பாகிஸ்தான் மற்றும் இதனுடன் இன்னும் சில நாடுகள் பொருளாதார பிரச்சனையில் இருப்பதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான், இலங்கை, எகிப்து, அங்கோலா மற்றும் கானா ஆகிய நாடுகள், 2019 - 2020 கணிப்புகளுடன் ஒப்பிடும்போது அவர்களின் வட்டி செலுத்துதலுக்கான வருவாய் விகிதங்களில் மிக முக்கியமான சரிவைக் காணும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பாகிஸ்தானின் வெளி நாட்டுநிதி இடைவெளி 6 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது என்றும், மேலும் பல ஆண்டுகளாக பரந்த நடப்பு கணக்கு பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த வெளி ஏற்றத்தாழ்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே, கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய வங்கியின் ஒட்டுமொத்த வட்டி விகிதங்கள் 750 அடிப்படை புள்ளிகள் உயர்வைத் தொடர்ந்து, அதிக வட்டி விகிதங்களால் பாகிஸ்தானின் நிதி நிலவரம் மிக மோசமாக பலவீனமடைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதோடு குறுகிய கால கருவூல பில்களை அடிக்கடி மாற்றுவதன் மூலம், இந்த உயர்ந்த உள் நாட்டு வட்டி விகிதங்கள் அரசாங்கத்தின் கடன் செலவுகளை விரைவாக அதிகரித்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
ஆக மொத்தத்தில் பாகிஸ்தான் விரைவில் மிக மோசான நிதிச் சிக்கலை சந்திக்கலாம் என்று கருதப்படுகிறது.