அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய அதிரடி அறிவிப்புகளால் அன்றாடம் செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார். அந்த வகையில் இன்றைய தினம் பூமியின் துணை கோளான நிலா அமெரிக்காவுக்கே சொந்தம் என அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் நிலவின் படத்தை பகிர்ந்து நிலா நம்முடையது (The moon is ours) என பதிவிட்டுள்ளார். அதனுடன் அமெரிக்க கொடியின் படத்தையும் இணைத்துள்ளார். டிரம்ப் அடிக்கடி இது போன்ற செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு இந்த இடம் அமெரிக்காவுக்கே சொந்தம் என கூறுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இயற்கையான பூமியின் துணை கோளாக அமைந்திருக்கும் நிலாவை ஒரு நாடு எப்படி தங்களுக்கு உரிமையானது என சொந்தம் கொண்டாட முடியும் என கேள்வி எழுகிறது.ஆனால் டிரம்ப் இப்படி சொல்வது இது முதல் முறையல்ல. ஈரான் - அமெரிக்கா இடையே பெரும் பிரச்சினையாக இருக்கும் உலகின் முக்கிய கடல் வழி போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியையும் அமெரிக்காவுக்கு சொந்தமானது என டிரம்ப் அவ்வப்போது பதிவு செய்திருந்தார்.
அதே போல அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை நியூ அமெரிக்கா என மாற்றலாம் என டிரம்ப் புதிய யோசனையை முன்வைத்தார். பலரும் நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை நியூ அமெரிக்கா என மாற்ற பரிந்துரைத்துள்ளனர், அந்த மாநில மக்களுக்கு இது மிகவும் மதிப்புமிக்கதாகவும் அழகாகவும் இருக்கும். எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையும் இந்த யோசனையை ஆதரிக்கும் வகையில், அந்த மாநில பெயரில் உள்ள மெக்சிகோ என்ற வார்த்தையை அடித்துவிட்டு, அதற்கு பதில் அமெரிக்கா என மாற்றப்பட்ட படத்தை பகிர்ந்துள்ளது. முன்னதாக ஈரான் உடனான போர் நீடிக்கும் நிலையில், கடந்த வாரம் ஹார்முஸ் நீரிணையின் பெயரை ட்ரம்ப் நீரிணை என மாற்றலாம் என டிரம்ப் புதிய பதிவை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே அதனை சீரியஸாக சொல்லவில்லை என பின்னர் கூறினார்.
2025ஆம் ஆண்டிலேயே மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்காவின் வளைகுடா என டிரம்ப் பெயர் மாற்றினார். இதற்கு மெக்சிகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கனடாவுடன் வர்த்தகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஒன்டாரியோ ஏரியை அமெரிக்கா ஏரி என பெயர் மாற்றுவதற்கான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார். கனடாவும் இந்த முயற்சியை கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற உள்நாட்டு பிரச்சினைகள் நிலவும் சூழலில் அமெரிக்க மக்களின் கவனத்தை திசைதிருப்பவே அதிபர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications


