கொரோனா பற்றி அதிகம் விளக்கத் தேவை இல்லை. பல குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
Recommended Video
இருப்பினும், உலகில் சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு, இந்த கொரோனா காலத்தில் கூட சில பல பில்லியன் டாலருக்கு மேல் எகிறி இருக்கிறதாம்.
எப்படி இவர்களின் சொத்து மட்டும் எகிறி இருக்கிறது? என்ன ஆச்சு என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
அறிக்கை
Institute for Policy Studies என்கிற அமைப்பு பில்லியனர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் அமெரிக்காவின் ஜெஃப் பிசாஸ் மற்றும் எலான் மஸ்கின் சொத்து பத்துக்கள் கணிசமாக அதிகரித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
வேலை இழப்பு
ஒரு பக்கம் கோடிக் கணக்கான நபர்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள், மறு பக்கம் பில்லியனர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது. அதே போல பொதுவாக பல துறைகள் முடங்கி நஷ்டத்தைக் கொடுத்தாலும், Zoom போன்ற கம்பெனிகளின் செயலிகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதால், பங்குகள் நல்ல விலை ஏற்றம் கண்டு இருப்பதாகச் சொல்கிறது Institute for Policy Studies-ன் அறிக்கை.
ஜெஃப் பிசாஸ்
சரி, நம் அமேசான் தலைவர் ஜெஃப் பிசாஸுக்கு, இந்த கொரோனா லாக் டவுன் காலத்தில் எவ்வளவு சொத்து அதிகரித்து இருக்கிறது என ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்கைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. கடந்த ஏப்ரல் 2020-ல் 113 பில்லியன் டாலராக இருந்த சொத்து மதிப்பு, இன்று 146.9 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. 33 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
காரணம் என்ன
கடந்த ஏப்ரல் 01, 2020 அன்று 1,907 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த அமேசான் நிறுவன பங்குகளின் விலை தற்போது சுமாராக 2,435 டாலருக்கு விற்பனை ஆகி வருகிறது. அமேசான் நிறுவனத்தின் மொத்த பங்கில் சுமாராக 11 % பங்குகள் நம் ஜெஃப் பிசாஸ் கை வசம் தான் இருக்கின்றன.
33 பில்லியன் டாலர்
எனவே பங்கு விலை ஏற்றம் நேரடியாக ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பை 33 பில்லியன் டாலர் ஏற்றிவிட்டது. வருடக் கணக்கில் எடுத்துப் பார்த்தாலும் இவர் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது. மார்ச் 2019-ல் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 131 பில்லியன் டாலர் தான். ஆனால் இப்போது 146 பில்லியன் டாலர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
எலான் மஸ்க்
அவ்வப் போது அறிவியல் தொடர்பாக ட்விட் போட்டு, தன் பக்கம் உலகத்தை திருப்பிக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் ஆர்வலர் + வியாபாரி எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, ஃபோர்ப்ஸ் கணக்குப் படி, ஏப்ரல் 2020-ல் 24.6 பில்லியன் டாலராகத் தான் இருந்தது. ஆனால் இன்று 36.7 பில்லியன் டாலராக சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
பங்குகள் தான்
அமேசான் நிறுவனரைப் போலவே, எலான் மஸ்கும், தன் டெஸ்லா கம்பெனியில் சுமாராக 18 % பங்குகளை வைத்திருக்கிறாராம். கடந்த ஏப்ரல் 01, 2020 அன்று டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை சுமாராக 481 டாலருக்கு வர்த்தகமானது. இன்று சுமாராக 815 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
12 பில்லியன் டாலர்
இந்த பங்கு விலை ஏற்றத்தால், மஸ்கின் சொத்து மதிப்பு சுமாராக 12 பில்லியன் டாலர் அதிகரித்துவிட்டது. எலானின் சொத்து மதிப்பு மார்ச் 2019-ல் 22.3 பில்லியன் டாலர். இப்போது 36.7 பில்லியன் டாலர். ஆக வருட கணக்கில் பார்த்தால் கூட 14 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.
முகேஷ் அம்பானி
பில்லியனர்கள் பட்டியல் என்றால் முகேஷ் அம்பானி இல்லாமலா..? இதோ நாமே போய் பார்ப்போம். இந்த ஏப்ரல் 2020-ல் நம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 36.8 பில்லியன் டாலராக இருந்து இருக்கிறது. இப்போது 52 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது.
47 % பங்கு
இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில், சுமார் 47 சதவிகித பங்குகளை முகேஷ் அம்பானி தான் வைத்திருக்கிறார். ஏப்ரல் 2020 தொடக்கத்தில் சுமாராக 1070 ரூபாய்க்கு வர்த்தகமான ரிலையன்ஸ் பங்குகள் விலை இப்போது 1,433 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சொத்து மதிப்பு
எனவே தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 52.7 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. ஆக ஒரே மாதத்தில் சுமாராக 16 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது. மார்ச் 2019-ல் அம்பானியின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர் தான். ஆனால் இப்போது 52.7 பில்லியன் டாலர். ஆக அப்படி பார்த்தாலும் 2.7 பில்லியன் டாலர் சொத்து அதிகரித்து இருக்கிறது.
கில்லி டயலாக்
"நாட்ல மழை கெடயாது, விவசாயம் கெடயாது, ஏழைங்க துட்டு இல்லாம கஷ்டப் பட்ராங்கோ. ஆனா உங்க கும்பல் கிட்ட மட்டும் துட்டு வந்துகின்னே இருக்குதே எப்புடி" என கில்லி படத்தில் ஒரு டயலாக் வரும். இந்த பில்லியனர்களின் விவரங்களைப் பார்க்கும் போதும், ஓட்டேரி நரியின் அந்த வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.