அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் பிரச்சனை மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் ஜோ பிடன் ஆட்சியிலும் தொடரும் எனப் பல தரப்புக் கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், அதை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே மாதம் ரிபப்ளிக் கட்சியினர் ஒப்புதல் அளித்த Holding Foreign Companies Accountable Act மசோதாவிற்குத் தற்போது டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அமெரிக்கா நாடாளுமன்றத்தின் இரு முக்கியத் தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது அதிபராக இருக்கும் டெனால்டு டிரம்ப் விரைவில் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவால் என்ன நடக்கும்..? வாங்கப் பார்ப்போம்.
சீன நிறுவனங்கள்
இந்த மசோதா இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்ற நிலையில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டு அமலாக்கப்படும் நிலையில், அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடவும், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் முதலீட்டை ஈட்டவும் பல சீன நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படலாம்.
தணிக்கை
அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்தோ அல்லது பத்திர வெளியீட்டு வாயிலாகவோ அமெரிக்கச் சந்தையில் முதலீடு திரட்ட வேண்டும் என்றால் நிறுவனத்தின் நிதியியல் தரவுகளை ஆய்வு செய்யவும், தணிக்கச் செய்யவும் Public Company Accounting Oversight Board அமைப்பு உரிமை உண்டு என்பதைக் கட்டாயமாக்குவது தான் இந்த மசோதா.
அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே PCAOB அமைப்புடன் இணைந்து பணியாற்றத் துவங்கியுள்ள நிலையில் சீன நிறுவனங்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
சீன நிறுவனங்கள் மோசடி
அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்கள் பல தங்களது நிதியியல் தணிக்கையை முறையாகச் செய்வது இல்லை. இதனால் பல மில்லியன், பில்லியன் டாலர் தொகை மோசடி செய்யப்படுகிறது என அமெரிக்க அரசு தரப்புக் கூறுகிறது.
உதாரணமாக அமெரிக்காவில் லக்கின் காஃப் இன்க் நிதியியல் அறிக்கை மோசடியில் சமீபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
3 வருட காலம்
இந்நிலையில் தற்போது ஒப்புதல் பெற்றுள்ள மசோதா மூலம் சீனா நிறுவனங்களுக்கும், சீன தணிக்கையாளர்களுக்கும் அடுத்த 3 வருட காலத்திற்குள் அமெரிக்கச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும், இல்லை எனில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் சீன நிறுவனங்கள் தனியார் நிறுவனமாக மாற வேண்டும் அல்லது அமெரிக்கா அல்லாத பங்குச்சந்தைக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 3 வருட இடைப்பட்ட காலத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் PCAOB அமைப்பு நிதியியல் அறிக்கையை ஆய்வு செய்யும்.
அலிபாபாவுக்கும் செக்
அமெரிக்காவின் இப்புதிய கட்டுப்பாடுகளைச் சீன நிறுவனங்கள் ஏற்காத பட்சத்தில், அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து அலிபாபா, பைய்டு உட்பட அனைத்து சீன நிறுவனங்களும் வெளியேற வேண்டியது கட்டாயம்.
இல்லையெனில் அமெரிக்க அரசு நிறுவனம் மீது தடை விதிக்கும் இதனால் பங்கு மதிப்பு ஜீரோ ஆகும்.
சீனா
பொதுவாகச் சீன நிறுவனங்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டு ஆணையத்தைத் தங்களது நிர்வாகத்திற்குள் நுழைய விடாது. இதனால் தற்போது அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள மசோதா சீன நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும்.