நியூசிலாந்து: பெண்கள் ஒரு நாட்டின் பிரதமர் மற்றும் அதிபர் போன்ற மிகப் பெரிய பதவிகளில் இருந்து கொண்டு குழந்தையைப் பெற்றுக் கொள்வது மிகவும் அரிதிலும் அரிதான சம்பவங்கள். அப்படி அரிதான சம்பவங்களாக இரண்டு பெண்கள் பிரதமர்களாக இருந்து கொண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்கள்.
அதில் முதலாமவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ. இவர் 1990-களில் பாகிஸ்தானின் பிரதமராக பதவியில் இருந்து கொண்டு தன் மகள் பக்தாவரைப் (Bhaktawar) பெற்றெடுத்தார்.
இரண்டாமவர் தற்போது நியூசிலாந்தின் பிரதமராக இருக்கும் ஜெசிண்டா ஆர்டென் (Jacinda Ardern). கடந்த 21 ஜூன் 2018-ல் தன் மகள் நெவெ டி அரோஹா (Neve Te Aroha)-வைப் பெற்றெடுத்தார். இது அன்றைய தேதியிலேயே மிகப் பெரிய வைரலானது.
க்ரைஸ்ட் சர்ச் மசூதி
கடந்த 15 மார்ச் 2019 அன்று நியூசிலாந்தில் இருந்த க்ரைஸ்ட் சர்ச் மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேருக்கு மேல் உயிர் இழந்தனர். 50 பேருக்கு மேல் படுகாய மடைந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் "இன்று நியூசிலாந்தின் கருப்பு நாள்" எனப் பதிவிட்டு தன் வருத்தத்தைப் பதிவு செய்தார் ஜெசிண்டா. அதோடு சம்பந்தபட்ட இடங்களுக்கே சென்று இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னார்.
ஹிஜாப்
ஜெசிண்டா ஒரு கிறிஸ்துவர் என்கிற போதும் இறந்தவர்களுக்கு உண்மையாகவே ஆறுதல் சொல்லும் விதத்தில், தானே ஹிஜாப் அணிந்து சென்று குடும்பத்தினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியது பெரிய அளவில் சர்வதேச பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நடவடிக்கை
அதோடு நியூசிலாந்தின் இறங்கள் புத்தகத்தை முதன் முதலாகத் திறந்து க்ரைஸ்ட் சர்ச் சம்பவத்தைப் பதிவிட்டு தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். நியூசிலாந்தின் ஆயுதச் சட்டங்களிலும் திருந்தங்களை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். ராயல் கமிஷன் மூலம் தீவிரவாத விசாரணைகளையும் முடக்கிவிட்டார். இப்படி தன்னால் ஆன சிறந்த விஷயங்களைச் செய்தாலும் சிலர் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே தான் இருந்தார்கள்.
விமர்சனமா
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நேற்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சூப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு பணத்தை கொடுக்க முடியாமல் தவித்த பெண்மணிக்காக நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டாவே பணத்தை கொடுத்து விமர்சனங்களை புறந்தள்ளி இருக்கிறார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நேற்று (ஏப்ரல் 04, 2019) நடந்தது. இதை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் ஒப்புக் கொண்டார் ஜெசிண்டா.
எதற்கு கொடுத்தீர்கள்
பத்திரிகையாளர் சந்திப்பில் ஏன் அந்த பெண்மனிக்கு பதிலாக சூப்பர் மார்க்கெட்டில் பணம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு "அவள் ஒரு தாய். அதனால் கொடுத்தேன்" என நறுக் பதில் கொடுத்திருக்கிறார். அதோடு அந்த தாய்க்கு இரண்டு குழந்தைகள் அவளுக்கு அன்புத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவளோ தன் பணப்பையை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டால். வாங்கிய பொருட்களுக்கு எப்படி பணம் கொடுப்பது என குழந்தைகளை வைத்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தால். அதனால் அவளுக்காக நான் பணம் கொடுத்தேன் எனச் சொல்லி இருக்கிறார் ஜெசிண்டா. மொத்த நியூசிலாந்தும் தங்கள் பிரதமரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.