கொரோனாவின் தாக்கம் இல்லாத துறை எது என்றால்? அது நிச்சயம் இருப்பது கஷ்டம் தான். அப்படி இருக்கையில் அது நம்மில் மிக பழக்கப்பட்ட ஒரு நிறுவனம் தான் நோக்கியா. இந்த நிறுவனம் முதல் காலாண்டில் லாபத்தினை கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
நோக்கியா நிறுவனம் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை என்றாலும், பின்லாந்தினை சேர்ந்த இந்த நிறுவனம் யெஸ்ப்பூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
உலகளவில் மிகப்பெரிய தொலைபேசி உற்பத்தி நிறுவனமான நோக்கியா நிறுவனம், சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 1,03,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
முதல் காலாண்டில் லாபம்
நோக்கியா உலகம் முழுக்க நெட்வொர்க் உபகரணங்கள், மென்பொருள், சேவைகள், மொபைல் உற்பத்தி என பலவற்றினை செய்து வருகிறது. ஆக இப்படி ஒரு நிறுவனத்தினை கூட கொரொனா விட்டு வைக்கவில்லை எனலாம். எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அதன் முதல் காலாண்டில் லாபத்தினைக் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
விற்பனை வீழ்ச்சி
உலகளவில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், அதன் விற்பனை குறைந்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது. குறிப்பாக சீனாவில் சப்ளை பாதிப்பினால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி -மார்ச் காலாண்டில் அதன் நிகரலாபம் 33 மில்லியன் யூரோவாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 116 மில்லியன் யூரோக்கள் நஷ்டத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
தேவை குறையவில்லை
லாபம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டாலும் விற்பனை முன்பை விட 2% குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜூவ் சூரி, நோக்கியா முதல் காலாண்டில் தேவை குறைவை காணவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளுக்கு அனுப்பும் விநியோகத்தில் பல சவால்களை கண்டதாகவும் தெரிவித்துள்ளது.
இனி பாதிப்பு இருக்கும்
அதுமட்டும் அல்ல கொரோனா காரணமாக மக்கள் சில செலவுகளை செய்ய யோசித்தனர். இதுவும் விற்பனை குறைய ஒரு காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளது. மேலும் நோக்கியா அதிவேக 5ஜி வழங்குனர்களில் சீனாவின் ஹூவாய் மற்றும் ஸ்வீடனின் எரிக்சனுக்கு அடுத்தபடியாக நோக்கியாவும் ஒன்றாகும். எனினும் இரண்டாவது காலாண்டில் நோக்கியாவுக்கு நிச்சயம் பெருத்த அடி இருக்கும் என்றும் சூரி கூறியுள்ளார்.