சீனாவின் மிகப் பெரிய கோடிஸ்வரரான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக்மா ஒரு வருடத்தில் இந்தப் பொறுப்புகளில் இருந்து எல்லாம் விடுபெறுவார் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற வாரம் ஜாக் மா அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டன.
ஜாக் மா
ஜாக் மா தற்போது தான் நிர்வகித்து வந்த பொறுப்புகளை எல்லாம் அலிபாபாவின் இணை நிறுவனரான டேனியல் சாங்கிடம் ஒப்படைக்கும் பணிகளில் உள்ளார். டேனியல் சாங் தான் அலிபாபாவின் அடுத்தத் தலைமை செயல் அதிகாரி ஆவார்.
உலகளவில் அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக அலிபாபா வளர்ந்ததற்கு ஜாக் மா ஒரு முக்கியக் காரணம் ஆவார். ஒரு வருடத்தில் அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரண்டு மடங்கு வரை உயர்ந்துள்ளது.
டேனியல் சாங்
இன்று செப்டம்பர் 10-ம் தேதியுடன் ஜாக் மாவின் பதவிக்கு டேனியல் சாங் வந்தாலும் அவரது முழுப் பொறுப்புகளை ஒப்படைக்க ஒரு வருட காலம் தேவைப்படுவதாகத் தமிழ் குடிரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
அலிபாபா உருவான கதை
1999-ம் ஆண்டு ஜாக் மா அலிபாபா நிறுவனத்தினை நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டிலேயே துவங்கினார், இன்று அது உலகின் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஆனால் அலிபாபாவை துவங்கும் முன்பு ஜாக் மா ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
ஆசிரியர்
ஆசிரியர்கள் தங்களை விட மாணவர்கள் சிறப்பானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள், அதே போன்று தான் நான் நிறுவனத்தில் இருந்து வந்தேன் என்றும் தனது 54வது பிறந்த நாளில் ஜாக் மா தெரிவித்துள்ளார். தற்போது மிண்டும் ஆசிரியர் பணியைத் தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நிரந்தர இணை நிறுவனர்
அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜாக் மா வெளியேறினாலும் 2020-ம் ஆண்டு வரை அலிபாபாவின் இயக்குநராகத் தொடரவும் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அலிபாபாவின் நிரந்தர இணை நிறுவனராகவும் தொடருவார்.
அலிபாபாவின் தலைவர்
ஜாக் மா அலிபாபா நிறுவனத்தின் தலைவராக 11 ஆண்டுகளாக இருந்துள்ளார் என்றும், மிகவும் திறமையானவர் என்றும் அவர் எடுக்கும் முடிவுகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று டேனியல் சாங் தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பு
ஜாக் மாவின் சொத்து மதிப்பு 09/10/2018 தேதி வரையிலான கணக்கின் படி 36.6 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் என்ற பெயரினை பெற்ற ஜாக் மா ஒரு முறை தான் சம்பாதித்த பணத்தைச் செலவிடவே தனக்கு நேரம் போதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.