சிங்கப்பூர் : கடந்த வாரம் இங்கிலாந்தின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றிய நிலையில், வளைகுடா பகுதிகளில் எண்ணெய் கப்பல்கள் செல்வது மிக பதற்றமான நிலையிலேயே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு இடையூறு உள்ளதாகவும், இதனால் மேற்கு ஆசியா மற்றும் லிபியா பகுதிகளில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு சதவிகிதம் அதிகரித்து, 56.19 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
இதுவே பிரன்ட் கச்சா எண்ணெய் விலை 1.4 சதவிகிதம் அதிகரித்து, 63.32 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதனால் இந்தியாவில் இதன் எதிரொலி காணப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையும் குறைந்து வருகிறது?
ஒரு புறம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தேவையும் குறைந்து வருவதோடு, மறுபுறம் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இருப்பும் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவு ஏற்றம் இல்லாமல் கடந்த வாரத்தில், சரிவிலேயே வர்த்தகமாகி வந்தது. இந்த நிலையில் வளைகுடா பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக அந்த பகுதியில் எண்ணெய் கப்பல்கள் சென்று வருவது பதற்றமான நிலையிலேயே சென்று வருகின்றன.
ஈரான் கைப்பற்றியது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஈரான் கடற்படையினரால், இங்கிலாந்து நாட்டு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டது. இந்த கப்பல் மீன் கப்பல்களில் மோதி சென்றதாகவும், இதனால் பாதுகாப்பு கருதி, இந்தக் கப்பலை பிடித்துள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது. ஆனால் இங்கிலாந்தோ இதை மறுத்துள்ளது. எனினும் இந்த பிரச்சனை இதோடு நிற்பதாகவும் தெரியவில்லை. ஏனெனில் இங்கிலாந்து, ஈரானின் மீது பொருளாதார தடை விதிப்பதாகவும், ஈரானின் சொத்துகளை முடக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த பகுதியில் மேலும் பதற்றம் நீடித்து வருகிறது.
ஈரான் ஏற்கனவே அமெரிக்காவுடன் பிரச்சனை?
ஏற்கனவே ஒரு புறம் அமெரிக்காவுடன் பிரச்சனையில் உள்ள ஈரான் தொடர்ந்து மேலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தேவையும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நியூயார்க் ஆய்வாளர்கள் இந்த பிரச்சனை நீடிக்காது. ஏனெனில் இங்கிலாந்து ஈரானின் கப்பலை கைப்பற்றியதற்காகத் தான் ஈரான், இங்கிலாந்து கப்பலை பிடித்து வைத்துள்ளது என்றும், இந்த பிரச்சனை விரைவில் தீரும் என்றும், இதனால் விலையேற்றம் நீடிக்காது என்றும் நியூயார்க் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் விலை அதிகரிப்பு இருக்கலாம்?
சும்மாவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் நிலையில், தற்போது சர்வதேச சந்தையிலேயே விலை ஏற்றம் காண தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச விலை நிலவரங்களை கொண்டு தான், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.