சிங்கப்பூர்: ஈரான் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு மத்தியிலான பிரச்சனையால் சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
மரணத் தண்டனையும்.. போராட்டமும்..
சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 47 தீவிரவாதிகளுடன், ஷியா பிரிவை சேர்ந்த மதகுரு ஷேக் நிமிர் அல்-நிமிர் என்பவருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் போராட்டம் வெடித்தது.
உறவு முறிந்தது..
இப்போராட்டத்தில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி அரேபியா தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சவுதி அரேபியா ஈரான் நாட்டுடனான உறவை முழுமையாக ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தது.
சவுதி அரேபியாவின் திடீர் மாற்றம்..
இந்நிலையில் இரு நாடுகளில் அமைதி நிலவவும், சிரியா மற்றும் ஏமென் நாடுகளிலும் தாக்குதல் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகச் சவுதி அரேபியா, ஈரானுடன் உறவை உயிர்பெறச் செய்வதாகத் திங்கட்கிழமை தெரிவித்தது.
விலை உயர்வு..
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய நாடுகளின் மத்தியிலான இத்தகைய பிரச்சனையால் சர்வதேச எண்ணெய் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 2.5 சதவீதம் வரை அதிகரித்தது. இதனால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 1 டாலர் வரை அதிகரித்து 38.50 டாலராக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்க WTI சந்தை 2.05 சதவீதம் வரை அதிகரித்துக் காணப்பட்டது.
சீன பங்குச்சந்தை
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆசிய சந்தையில் சீன பங்குச்சந்தை கணிசமாகப் பாதிக்கப்பட்டது. சீன சந்தையின் வீழ்ச்சியால் இந்திய சந்தையை அதிகளவில் பாதிக்கப்பட்டது.