வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. சூயஸ் கால்வாயில் 400 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத எவர் கிவன் கப்பல் தரைதட்டி நிற்கும் காரணத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் விற்பனை முடங்கியது மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. மேலும் பல நாடுகளில் எரிபொருள் உயர்ந்து வருகிறது உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.
25ஆம் தேதி சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 58.56 டாலராக இருந்த நிலையில், நேற்றைய வர்த்தக முடிவில் 60 டாலரைத் தாண்டியுள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 61 டாலரில் இருந்து 64.57 டாலராக உயர்ந்துள்ளது.
இதேவேளையில் OPEC நாடுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாமல் எவர்கிவன் கப்பல் முடக்கியுள்ள காரணத்தால் 63.22 டாலரில் இருந்து 61.63 டாலராகக் குறைந்துள்ளது.
தற்போது 160 கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாகச் செல்ல முடியாமல் முடங்கி நிற்கிறது. இதில் 24 கச்சா எண்ணெய் கப்பல்களும் அடக்கம். இந்தியாவிற்கு வரும் பெரும்பாலான கச்சா எண்ணெய் இந்த வழியில் தான் வருகிறது.
சூயஸ் கால்வாய் வாயிலாகவே இந்தியா தினமும் அரபு நாடுகளிடம் இருந்து சுமார் 5,00,000 பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சூயஸ் கால்வாயில் ஏற்பட்டு உள்ள டிராபிக் ஜாம் பிரச்சனையால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் நிலவுகிறது.
சூயஸ் கால்வாய் வாயிலாக ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 50க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் செல்லும் நிலையில் தற்போது இக்கால்வாயின் இரு பக்கத்திலும் முடங்கியிருக்கும் 160 கப்பல்களில் கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல் ஆடைகள், பர்னீச்சர்கள், உற்பத்தி பொருட்கள், கார் உதிரி பாகங்கள் எனப் பல முக்கியமான பொருட்கள் இருக்கும் காரணத்தால் ஆசிய நாடுகளில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது உற்பத்தி பொருட்களைப் பெற முடியாமல் ஸ்தம்பித்துக் கிடக்கிறது.