ஈரான் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பல நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.
பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஒரு நாடு. இங்கே ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாயில் 130 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது.இதனால் அங்கே பல்வேறு பொருட்களின் விலைவாசியும் பல மடங்கு உயர்வு கண்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் லாக்டவுன் என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளாராம்.

ஏற்கனவே ஈரான் போரால் ஹோர்முஸ் , பாப்-எல்-மண்டேப் பகுதிகளில் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன. இது உடனடியாக பாகிஸ்தான் சந்தையில் பெட்ரோல் விலை உயர செய்துள்ளது.
எனவே பிரச்சினையை தீர்க்க அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே செயல்படும் வகையில் அரசு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாம். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் வார விடுமுறையாக அறிவிக்கப்பட உள்ளதாம். இதன் மூலம் சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்தை குறைத்து எரிபொருள் நுகர்வை கணிசமாகக் குறைக்க முடியும் என அரசு நம்புகிறது.
அலுவலகங்களில் ஊழியர்களின் கூட்டத்தை குறைக்க சுழற்சி முறை வருகை மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை ஆகிய அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது குறிப்பிட்ட நாட்களில் சில ஊழியர்கள் அலுவலகத்திற்கும், மற்றவர்கள் வீட்டிலிருந்தும் வேலை செய்வார்கள்.
பொதுமக்கள் ஒன்று கூடுவதைக் குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் வணிக சந்தைகள் முன்கூட்டியே மூடப்படலாம் அல்லது வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என்ற யோசனைகளும் பரிசீலனையில் உள்ளன என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடும் செய்தி கூறுகிறது.
எரிபொருளை சேமிக்கவும், அதிகாரப்பூர்வ போக்குவரத்து செலவுகளை குறைக்கவும் அரசுக்கு சொந்தமான வாகனங்களில் 50% வாகனங்களை இயக்காமல் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை போக்க எரிபொருள் நிவாரண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வாரந்தோறும் 5 லிட்டர் பெட்ரோலும், கார் உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு 10 நாட்களுக்கும் 10 லிட்டர் பெட்ரோலும் மானிய விலையில் வழங்கப்படும்.
உள்நாட்டு எரிபொருள் நுகர்வை குறைக்க இந்த திட்டங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் கடுமையான கடன் நெருக்கடியில் உள்ளது. வெளிநாட்டு கடன்களை அடைக்கவே முடியாமல் திணறும் நிலையில் இந்த விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிகைகள் பாகிஸ்தானுக்கு இன்னமும் தான் அதிக செலவினை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications


