நடிகர் சூர்யா நடித்த காப்பான் படத்தில் சாமானிய மக்களையும், விவசாயிகளையும் பயம்புறுத்திய வெட்டுக்கிளி தாக்குதல் தற்போது பாகிஸ்தானில் நடக்கிறது. கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் விவசாயத்தை முற்றிலுமாக அழித்துவிடும் அளவிற்கு அதன் தாக்குதல் படுபயங்கரமாக இருக்கிறது.
இதைக் கட்டுப்படுத்த இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு மத்தியில் நிலவும் வர்த்தகத் தடையும் மீறி, இந்தியாவில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கப் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றம்
அந்நாட்டில் தற்போது நிலவி வரும் வெட்டுக்கிளி தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை இதனை அழிக்கச் சிறப்புப் பூச்சிக்கொல்லி மருந்தை இந்தியாவில் இருந்து வாங்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையை உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான ரெயூட்டர்ஸ் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்பு இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
வர்த்தக மற்றும் நட்புறவு தடை
காஷ்மீர் பிரச்சனையின் எதிரொலியாகவும், இரு நாடுகளுக்கு மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனையின் காரணமாகவும் சில மாதங்களுக்கு முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு மத்தியிலான நட்புறவைத் துண்டித்துக் கொண்டது மட்டும் அல்லாமல் 100 சதவீத வர்த்தகத் தடையையும் அறிவித்தது.
ஜூன் - ஜூலை
வருகிற ஜூன் - ஜூலை மாதங்களில் பாகிஸ்தானில் மிகப்பெரிய லோகஸ்ட் அதாவது வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை எடுக்கும் விதமாகப் பல முக்கியப் பணிகளைச் செய்து வருகிறோம் எனப் பாகிஸ்தான் நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயிர் பாதுகாப்புத் துறையில் தலைவர் Dr Falak Naz ரெயூட்டர்ஸ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
சீனா
பாகிஸ்தான் நாட்டின் நட்பு நாடான சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் மிகப்பெரிய அளவில் இருப்பதால் அங்கிருந்து பூச்சிக்கொல்லி மருந்தை இறக்குமதி செய்வது முடியாது.
இதனால் பாகிஸ்தான் மற்ற நாடுகளிடம் இருந்து ஜூன் - ஜூலை மாத வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்கொள்ளப் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்க நாடாளுமன்றத்தில் ஆலோசனை செய்யப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
ஈரான்
லோகஸ்ட் எனப்படும் பெரிய வடிவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாகப் பாகிஸ்தான் நாட்டின் சோளம், பருத்தி, கோதுமை மற்றும் பல இதர விவசாயப் பொருட்களின் விளைச்சல்களை நாசம் செய்துள்ளது. இந்தப் பெரிய சைஸ் வெட்டுக்கிளி ஈரான் நாட்டில் இருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் அரசு இந்த வெட்டுக்கிளி தாக்குதலைத் தேசிய பேரிடர் ஆக அறிவித்துள்ளது.
இந்தியா உதவுமா..?
பல்வேறு நடவடிக்கையின் மூலம் சுமார் 1,42,000 ஏக்கர் விவசாய நிலத்தைப் பாதுகாத்துள்ள பாகிஸ்தான் தற்போது எஞ்சியுள்ள பயிர்களைக் காப்பாற்ற இந்தியாவின் உதவியை நாடுகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் கேட்டால் இந்தியா உதவுமா..? இந்திய மக்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உதவலாமா..? வேண்டாமா..?