உலகின் பல நாடுகளில், பங்குச் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு எப்படி மும்பை பங்குச் சந்தை இருக்கிறதோ, அதே போல பாகிஸ்தானுக்கு பாகிஸ்தான் பங்குச் சந்தை (Pakistan Stock exchange) செயல்பட்டு வருகிறது.
இன்று காலை, கராச்சியில் இருக்கும், பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், துப்பாக்கி மற்றும் கை எரி குண்டுகளை (Grenades) வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்களாம்.
இதுவரை, பாகிஸ்தான் பங்குச் சந்தை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில், நான்கு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்களாம். இந்த தீவிரவாதிகள் தாக்குதல் சூழலை, பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு சமாளித்து வருவதாக பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகம் சொல்லி இருக்கிறது.
இந்த தாக்குதலில், ஐந்து பேர் உயிர் இழந்து இருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் வேலையில் அரசு இறங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் சொல்கின்றன.
பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில், பாகிஸ்தான் நாட்டின் பல வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பங்குச் சந்தையின் முக்கிய இண்டெக்ஸான கராச்சி ஸ்ஆக் எக்ஸ்சேஞ்ச் 30 (KSE 30) இண்டெக்ஸ் 14,665 புள்ளிகளில் வர்த்தகமாவதாகச் சொல்கிறது ப்ளூபெர்க்.
தீவ்ரவாதிகள் தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தான் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறதா அல்லது வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்த இருக்கிறார்களா போன்ற விவரங்கள் தெரியவில்லை.
ஏற்கனவே ஆசிய பங்குச் சந்தைகள் எல்லாம் பயங்கர இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஜப்பானின் நிக்கி மட்டும் 2.3 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்போது பாகிஸ்தான் பங்குச் சந்தை மீது வேறு தாக்குதல் நடத்தி இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகளிலும், முதலீட்டாளர்களின் செண்டிமெண்ட் மாறலாம்.
ஏற்கனவே இந்தியாவில், மும்பை பங்குச் சந்தை சுமாராக 350 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.