இஸ்லாமாபாத், பாகிஸ்தான்: 1947-ல் இருந்து இன்று வரை இந்தியாவும் பாகிஸ்தானும் பல இடங்களில் பகை உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
நான்கு முறை இரண்டு நாடுகளும் நேரடியாக தங்கள் ராணுவங்களைக் கொண்டு போராடியும் இருக்கிறார்கள். அவ்வப் போது இந்தியா பாகிஸ்தான் பார்டர்களில் தீ பற்றி எரிந்து இருக்கிறது. எரிந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இரண்டு நாடுகளுக்குள் இன்னும் மனிதமும், மனித நேயமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகாரி ஜெய்பூரில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 150 பயணிகளை காப்பாற்றி இருக்கிறார் என லைவ் மிண்ட் பத்திரிகையின் செய்தி சொல்கிறது. இனி லைவ் மிண்டில் உள்ள படி...
விமானம்
கடந்த வியாழக்கிழமை இந்த மனித நேயம் நம் இந்தியா பாகிஸ்தான் வானெல்லையில் நடந்து இருக்கிறது. இந்தியாவின் அரண்மனை நகரங்களில் ஒன்றான ஜெய்பூரில் இருந்து 150 பயணிகளுடன், ஒரு விமானம், மஸ்கட்டை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. இப்போது வரை பாகிஸ்தான் வான் எல்லையைப் பயன்படுத்த இந்தியாவுக்கு தடை நீடித்து வருகிறது.
கராச்சி பிராந்தியம்
எனவே விமானம், பாகிஸ்தான் வான் எல்லையைப் பயன்படுத்தாமல், இந்திய விமானங்கள் பறக்க வேண்டும். அப்படி கராச்சி பிராந்தியத்துக்கு அருகில் பறந்து கொண்டிருக்கும் போது தான் விமானமும், விமானிகளும் ஒரு பெரிய பிரச்னையைச் சந்திக்க நேரிடுகிறது. அந்த பிரச்னையின் பெயர் மோசமான வானிலை.
கருமேகம்
விமானம் அப்போது சுமாராக 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. திடீரென மின்னல் தாக்கி விமானம் 34,000 அடியில் பறக்கத் தொடங்கிவிட்டது. மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு மே டே, மே டே என எச்சரிக்கை சமிக்ஞையைக் கொடுத்து இருக்கிறார் விமானி.
பாகிஸ்தானி உதவி
உடனடியாக விமானம் பறந்து கொண்டிருந்த பிராந்தியத்தில் இருந்த பாகிஸ்தானிய விமான போக்குவரத்து அதிகாரி உதவிக்கு வருகிறார். அதன் பின் விமானத்தை எப்படி, எந்த திசையில் செலுத்தினால் இந்த மோசமான வானிலைப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என விமானிகளுக்கு வழி சொல்லி இருக்கிறார்.
பிழைத்தார்கள்
பாகிஸ்தானிய விமான போக்குவரத்து அதிகாரியின் வழி காட்டுதலின் படி, விமானிகள் தங்கள் விமானத்தை இயக்கியதால், எந்த அசம்பாவிதமும் நடக்காமல் தப்பித்தார்கள். இந்த மோசமான வானிலையில் சிக்கி இருந்தால், விபரீத விளைவுகள் ஏற்பட்டு இருக்கும் எனச் சொல்லி இருக்கிறது ஜியோ நியூஸ் (Geo News).
அன்பு சிந்தட்டும்
அவ்வப் போது துளிர்க்கும் இந்த மனிதமும், மனித நேயமும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் எப்போதும் கரை புரண்டு ஓடட்டுமே..! இந்து - முஸ்லிம், இந்தியா - பாகிஸ்தான், அல்லா - சிவன் என பாகுபாடுகள் ஒழியட்டும். உலக மனிதர்கள் மனதில் அன்பு வழியட்டும். மனிதர்களை நேசிப்போம், அன்பை சுவாசிப்போம்.