உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றுக்கு வேக்சின் கண்டுபிடித்த உலக மக்களை காப்பாற்றி வரும் பைசர் நிறுவனப் பங்குகள் 1999ஆம் ஆண்டுக்குப் பின், அதாவது சுமார் 20 வருடங்களுக்குப் பின்பு வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ளது.
அமெரிக்காவில் ஒருபக்கம் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மறுபுறம் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்டா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் பைசர் நிறுவனத்தின் பங்குகள் 20 வருடத்தில் முதல் முறையாக வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
பைசர் நிறுவனப் பங்குகள்
நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள பைசர் நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4.9 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கு விலை 48.57 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி 47.44 டாலர் தான் உச்ச அளவாக இருந்தது.
கொரோனா வைரஸ் வேக்சின்
இதுமட்டும் அல்லாமல் கொரோனா வைரஸ்-க்கு வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்ட நாளான நவம்பர் 9ஆம் தேதிக்குப் பின்பு அதிகப்படியான உயர்வு அடைந்ததும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தான். கடைசியாக பைசர் நிறுவனம் வேக்சின் கண்டுபிடித்ததற்கான பலன் பெற்றுள்ளது என கேபெலி பண்ட் போர்போலியோ மேனேஜர் தெரிவித்துள்ளார்.
வேக்சின் தொழில்நுட்பம்
முதலில் முதலீட்டாளர்கள் வேக்சின் ஒரு முறை முதலீடு செய்யும் வாய்ப்பாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது தனது வேக்சின் தொழில்நுட்பத்தைப் பிற கொடிய நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பைசர் நிறுவனத்தின் பெருமளவிலான வர்த்தகத்தை உருவாக்க முடியும் என கேபெலி பண்ட் போர்போலியோ மேனேஜர் தெரிவித்துள்ளார்.
சக போட்டி நிறுவனங்கள்
வேக்சின் தயாரிப்பில் பைசர் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான மார்டெனா 4 சதவீதமும், ஜெர்மனி பயோஎன்டெக் 5 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் பைசர் 4.9 சதவீதம் உயர்ந்து வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
பைசர் நிறுவன பங்குகள்
கடந்த ஒரு வருடத்தில் பைசர் நிறுவனப் பங்குகள் 34.61 சதவீதம் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது, இதன் மூலம் 35.80 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட பைசர் நிறுவனப் பங்குகள் 48.19 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
பைசர் இந்திய பங்குகள்
இந்தியச் சந்தையில் பைசர் நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.86 சதவீதம் வரையில் சரிந்து 5,750 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் 2.43 சதவீதமும், ஒரு மாதத்தில் 0.03 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது. 2021ல் 8.91 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.