கத்தார்: எண்ணெய் வளம் அதிகம் கொண்ட வளைகுடா நாடுகள் இன்று வரை வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாத நிலையில் கத்தார் முதன் முதலாகக் குறிப்பிட்ட அளவிலான நிரந்த குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்துக் கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு ஆண்டு 100 நபர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விண்ணப்பம்
கத்தார் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இப்போது பெறப்பட்டு வருவதாகவும் செப்டம்பர் 4ம் தேதி நிரந்தரக் குடியுரிமை பெறப்போகும் 100 நபர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
வளைகுடா நாடுகள்
சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பகிரின் மற்றும் எகிப்த் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் வெளிநாட்டவர்களைக் கூடுதல் நாட்கள் தங்க அனுமதி அளித்தாலும் இது வரை நிரந்தரக் குடியுரிமையினை அளிக்காத நிலையில் கத்தரின் இந்த முடிவு சர்ச்சையினை ஏற்படுத்தி வருகிறது.
குழந்தைகள்
வெளிநாட்டவர்களுக்குக் கத்தாரில் குழந்தை பிறந்தால் அவர்கள் 10 வருடம் அங்கு இருந்தால் நிரந்தரக் குடியுரிமை பெறலாம். இதுவே வெளிநாட்டவர்கள் என்றால் 20 வருடங்களுக்கு அங்குப் பணி நிமித்தமாக, வணிகம் நிமித்தமாக இருந்திருக்க வேண்டும்.
மொழி சிக்கல்
அது மட்டும் இல்லாமல் கத்தாரின் நிரந்தரக் குடியுரிமை வேண்டும் என்றால் அரபிக் மொழியில் தங்கு தடையின்றி எழுத, படிக்க மற்றும் பேச தெரிந்து இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம் ஆகும்.
கத்தார் பெண் திருமணம்
கத்தார் பெண்ணை வெளிநாட்டவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படும். அது மட்டும் தனித்திறன் படைத்தவர்களுக்குக் கத்தாரில் நிரந்தரக் குடியுரிமை பெற சிறப்பு அனுமதிகள் வழங்கப்படுகிறது.
நிரந்தரக் குடியுரிமையின் நன்மை
நிரந்தரக் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்கள் உள்ளூர் கூட்டாளிகள் இல்லாமல் சொந்தமாக வணிகம் செய்ய முடியும்.
வேலை விசா கொள்கைகள் மாற்றம்
அது மட்டும் இல்லாமல் விசா கொள்கைகளில் திருத்தம் கொண்டு வந்துள்ள கத்தார் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் விசா பதவிக் காலம் முடிந்த பிறகும் தேவை இருப்பின் காலக்கெடுவை நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதே நேரம் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.