மும்பை: லிப்ரா. Facebook நிறுவன க்ரிப்டோ கரன்ஸியின் பெயர். இந்த க்ரிப்டோ கரன்ஸியை (Cryptocurrency)2020-க்குள் உலகம் முழுக்க கொண்டு வரப் போவதாக சில தினங்களுக்கு முன் சொன்னது ஃபேஸ்புக்.
சொல்லி முடிப்பதற்குள் "இந்தியாவில் ஃபேஸ்புக் தன் க்ரிப்டோ கரன்சிகளை பயன்பாட்டுக்கு விட முடியாது. ஆர்பிஐ க்ரிப்டோ கரன்சிகளுக்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை" என ஒரு தரப்பு பிரச்சனைத் தீயைப் பற்ற வைத்திருக்கிறது.
ஆக இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோ கரன்ஸி மற்றும் அந்த க்ரிப்டோ கரன்ஸியை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் இ வேலட்டுகள் என எதுவுமே இந்தியாவில் கிடைக்காது, இந்திய இணைய வெளியில் கிடைக்காது எனச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்த ஆர்பிஐ அதிகாரிகள்.
ஆர்பிஐ அனுமதி
இது வரை இந்தியாவில் தன் க்ரிப்டோ கரன்ஸிகளைப் பயன்படுத்த ஆர்பிஐ-யிடம் ஃபேஸ்புக் நிறுவனம் முறையாக எந்த விண்ணப்பத்தையும் கொடுக்கவில்லை என்பதையும் ஆர்பிஐ வட்டாரத்திலேயே உறுதியாகச் சொல்கிறார்கள். ஆர்பிஐயிடம் இதைப் பற்றிக் கேட்ட போது பதில் சொல்லவில்லை.
ஃபேஸ்புக்கில் மட்டும்
இந்த தடை சர்ச்சைக் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் கேட்ட போது "ஃபேஸ்புக் நிறுவனத்தின் கலிப்ரா ஈ-வேலட்டை வாட்ஸப்களிலும், ஃபேஸ்புக் மெசஞ்சர்களிலுமே பயன்படுத்தலாம். எனவே உலகம் முழுக்க வாட்ஸப் & ஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்கள் எங்கள் க்ரிப்டோகரன்சியையும் பயன்படுத்த முடியும்" என ஆர்பிஐ-க்கு ட்விஸ்ட் பதில் கொடுத்திருக்கிறது ஃபேஸ்புக்.
மற்ற நிறுவனங்கள்
வீசா, மாஸ்டர் கார்ட், பேயூ, உபர் என பல்வேறு பேமெண்ட் சொல்யூஷன் நிறுவனங்களுடன் தங்களின் லிப்ரா க்ரிப்டோகரன்சியை ஏற்றுக் கொள்ள ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். இதுவரை சுமார் 30 பேமெண்ட் சொல்யூஷன் நிறுவனங்களிடம் ஃபேஸ்புக் ஒப்பந்தம் போட்டிருக்கிறதாம். லிப்ரா க்ரிப்டோகரன்ஸி பயன்பாட்டுக்கு வருவதற்குள் சுமார் 100 பேமெண்ட் சொல்யூஷன் நிறுவனங்களாவது தங்கள் லிப்ரா க்ரிப்டோகரன்ஸியை ஏற்பார்கள் எனச் சொல்கிறது ஃபேஸ்புக். அதோடு ஃபேஸ்புக்கின் இந்த லிப்ரா க்ரிப்டோ கரன்ஸியை எந்த நாட்டு கரன்ஸியாகவும் மாற்றிக் கொடுக்க, ஃபேஸ்புக் தன் மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறதாம்.
அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலரில் மதிப்பிடப்படும் இந்த லிப்ரா க்ரிப்டோ கரன்ஸி டாலர் போலவே நிலையான விலை மாற்றங்களுடன் இருக்குமாம். இந்த லிப்ரா ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள்ளேயே புழங்கிக் கொண்டிருப்பது அல்லது க்ரிப்டோ கரன்ஸி பரிமாற்றங்களில் பரிமாறப்பட்டுக் கொண்டிருப்பது வரை ஆர்பிஐ-க்கு அதிக தலைவலி இல்லை. ஆனால் இந்த க்ரிப்டோ கரன்ஸிகள், இந்திய ரூபாய்க்கு மாற்றாக அல்லது இந்தியாவில் பணப் பரிமாற்றமாக நடந்தால் தான் பிரச்னை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
ஆர்பிஐ தடை
கடந்த ஏப்ரல் 2018-ல், இந்தியாவில் க்ரிப்டோ கரன்ஸிகளைப் பயன்படுத்த தற்காலிக தடை விதித்தது. ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்னும் வழக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அடுத்த விசாரணை வரும் ஜூலை 23, 2019 அன்று நடக்கப் போகிறது. இதில் வரும் தீர்ப்பு கூட ஃபேஸ்புக்கின் க்ரிப்டோ கரன்ஸி வியாபாரத்தை மாற்றலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
உச்ச நீதிமன்றத்தில்
அதே போல ஒரு இந்திய நிறுவனம் அல்லது ஒரு இந்தியர், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு, ஃபேஸ்புக்கின் க்ரிப்டோ கரன்ஸிகள் மூலம், பணச் சலவை செய்வது, கறுப்புப் பணம் பதுக்குவது, வரி மோசடி செய்வது போன்ற வேலைகளில் ஈடு பட்டால் கூட, இந்திய ஐடி சட்டம் பிரிவு 79-ன் கீழ், கடுமையான தண்டனைக்கு ஃபேஸ்புக் உட்பட வேண்டி இருக்கும், என எச்சரிக்கிறார்கள் டெக் சட்ட வல்லுநர்கள். சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட, எந்த ஒரு டெக்னாலஜி ப்ளாட்ஃபார்களும் இடம் கொடுக்கக் கூடாது என இந்திய ஐடி சட்டத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறதாம்.
பேமெண்ட் சாம்ராஜ்யம்
தற்போது இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸப் மற்றும் 30 கோடி பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இந்த யூசர்களை வைத்துக் கொண்டு ஃபேஸ்புக் தன் பேமெண்ட் சொல்யூஷன் சாம்ராஜ்யத்தை வலுவாக இந்தியாவில் நிறுவன 2018 முதல் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை ஆர்பிஐ இடம் முறையாக விண்ணப்பிக்க முயற்சிக்கவில்லை போல. அதான் ஆர்பிஐ கோபத்தின் உச்சத்தில் இருக்கிறதாம்.