இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் பல மாநிலங்கள் புதிய வர்த்தகத்திற்காகவும், வருவாய் ஈட்டு பல்வேறு சலுகைகளை வாரிவழங்கி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்தியானா என்னும் மாநிலம் இன்போசிஸ் நிறுவனத்தைத் தன் மாநிலத்தில் புதிய அலுவலகத்தைத் திறக்க வலியுறுத்தி 31 மில்லியன் டாலர் ஊக்க தொகை அளித்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவில் சுத்தி அடிவாங்கும் இத்தகைய சூழ்நிலையில் இந்தியானா மாநிலத்தின் அறிவிப்பு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
அமெரிக்காவில் டொனால்டு டிர்ம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய ஐடி நிறுவனங்கள் எச்-1பி விசா, குடியேற்ற விதிமுறைகள் எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்தது.
இத்தகைய சூழ்நிலையில் இந்தியானா மாநிலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் என்ன லாபம்..?
இந்தியானா மாநிலம்
மேலும் இம்மாநில அரசு பல இந்திய ஐடி நிறுவனங்களை ஈர்த்து இப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களைத் தாய்நாட்டிற்கே துரத்தியடிக்கும் நிலையில் தற்போது இந்நாட்டில் இருக்கும் மாநில அரசுகள் சிவப்புக் கம்பளத்தில் வரவேற்கிறது சற்று மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
ஊக்கத் தொகை
தற்போது இன்போசிஸ் நிறுவனத்திற்கு இந்தியானா மாநிலம் அளிப்பதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை, இம்மாநில அரசு உருவாக்கியுள்ள வளர்ச்சி நிதியில் இருந்து ஒரு பகுதியும், மீதமுள்ளவை வரிச் சலுகையாகவும் அளிக்க இம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முதல் முறை
இந்தியானா மாநிலம் வருவாய் பெருக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இதுபோல் பல முறை பல நிறுவனங்களுக்கு ஊக்க தொகை அளித்திருந்தாலும் இவ்வளவு பெரிய தொகை இதுவரை இம்மாநிலம் அளித்ததில்லை.
அதுவும் இந்திய நிறுவனத்திற்கும் இதுவே முதல் முறை.
இன்போசிஸ்
அமெரிக்காவில் பிரச்சனை வெடிக்கத் துவங்கி சில நாட்களிலேயே இன்போசிஸ் தனது வர்த்தகத்தைப் பாதுகாக்கவும், தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு முடிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்தது.
இதில் ஒன்றாக இந்தியானா மாநிலத்தில் அலுவலகத்தை அமைக்கத் திட்டமிடுவது மட்டுமல்லாமல் இதற்கான அறிவிப்பையும் இன்போசில் அமெரிக்கா வெளியிட்டது.
8.7 மில்லியன் டாலர்
இதன்படி புதிய அலுவலகத்தை அமைக்க அலுவலகத்தைக் குத்தகைக்கு எடுக்கவும், உபகரணங்களை வாங்கவும் சுமார் 8.7 மில்லியன் டாலர் பட்ஜெட்-ஐ இன்போசிஸ் அறிவித்த நிலையில், தற்போது சற்றும் எதிர்பாராத விதத்தில் இந்தியானா மாநில அரசு சுமார் 31 மில்லியன் டாலர் அளவிலான ஊக்க தொகையை அறிவித்துள்ளது.
எரிக் ஹோல்கோம்பு
இன்போசிஸ் ஊக்க தொகை குறித்து இந்தியானா மாநிலத்தின் கவர்னர் எரிக் ஹோல்கோம்பு அறிவித்த நிலையில், மற்றொரு நிறுவனத்திற்கும் இத்தகைய ஊக்க தொகை அளித்து அலுவலகத்தை அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார் எரிக்.
வளர்ச்சி அமைப்பு
இந்தியானா பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்புக் கூறுகையில், இம்மாநிலத்தில் உருவாக்கப்படும் ஒரு வேலைவாய்ப்புக்கு 15,250 டாலர் வரையிலான வரி சலுகையும், பயற்சி அளித்துப் பணிக்குச் சேர்க்கப்படும் ஊழியர்களுக்கு 5,00,000 டாலர் வரையிலான சலுகை அளிக்க இந்தியானா மாநிலம் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்த அமைப்பு.
2000 ஊழியர்கள்
இன்போசிஸ் ஏற்கனவே அறிவித்துள்ள படி இங்கு 2000 வேலைவாய்ப்புகளை அளித்தால் சுமார் 31 மில்லியன் டாலர் வரையிலான வரி சலுகையைப் பெறும். மேலும் டெக்சாஸ் மாநிலத்திலும் இதேபோன்ற பேச்சுவார்த்தையை இன்போசிஸ் நடத்தி வருகிறது.
எல் அண்ட் டி இன்போடெக்
இன்போசிஸ் உடன் போட்டி போடும் வரையில் எல் அண்ட் டி இன்போடெக் நியூயார்க், நியூஜெர்சி மற்றும் கனனெடிகட் ஆகிய பகுதிகளில் தனது ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாவும், அதற்கான சலுகைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் குறைந்தபட்சம் 1000 வேலைவாய்ப்புகளை ஒரு மாநிலத்தில் உருவாக்கினால் அதிகளவிலான சலுகையைப் பெறலாம்.
இந்திய நிறுவனங்களுக்கு லாபம்..
அமெரிக்கச் சந்தையில் அந்நாட்டுக் குடிமக்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தியாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது மாட்டிக்கொண்டு இருக்கும் நிலையில், இத்தகைய ஊக்க தொகை மற்றும் வரிச் சலுகை அதிகளவில் பயன் அளிக்கும்.
மேலும் அமெரிக்க மாநிலங்களின் இத்தகைய சலுகையின் காரணமாகச் செலவுகளின் அளவும் அதிகளவில் குறையும். இது இந்திய நிறுவனங்களுக்கு லாபம்.
என்ஆர்ஐ
அமெரிக்காவில் படித்து வேலை செய்து கொண்டிருக்கும் இந்தியர்கள், கிரீன்கார்டு வைத்திருக்கும் எனஆர்ஐகள் என எச்1பி விசா பிரச்சனை இல்லாத அனைத்து இந்தியர்களுக்கு இது சிறப்பான வாய்ப்பு.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுக்கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்தியர்களுக்கு முன்உரிமை அளித்து வருகிறது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி அமெரிக்காவில் இருக்கும் என்ஆர்ஐகள் அதிகளவிலான சம்பளத்தைக் கோர முடியும்.
கிடைத்தால் லாபம், இல்லையெனில் பல அமெரிக்க நிறுவனங்கள் இருக்கிறது. ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்துக்கொள்ளலாம்.